என்று குகன் பெருமையை அறிவிக்கும் கம்பர் பாட்டு மிக்க அழகு வாய்ந்ததாகும். “என் பெருமானே! அயோத்தி மாநகரில் அரியாசனத்தில் மன்னர் மன்னனாய் மணிமுடி தரித்துச் செங்கோலேந்தி அரசாளும் கோலத்தில் காண வேண்டிய உன்னைச் சடைமுடியும் மரவுரியும் தரித்துக் கானகப் புல்லில் அமர்ந்திருக்கக் கண்டேனே! என் கண் செய்த பாவம் கடலினும் பெரிதன்றோ? இந்தக் கோலத்தில் உன்னைக் கண்ட என் கண்களைப் பறித்தெறியாத பாவியேன் நான். ஆயினும், ஐயனே! உன்னை விட்டுப் போக என்னால் இயாலாது; என்னா லியன்ற சிறுதொண்டு செய்துகொண்டு ஈண்டுத்தான் இருப்பேன்” என்று மனங்கசிந்து பேசினான். கங்கை வேடன் பேசிய வாசகத்தின் சுவையை அறிந்த இராமன், “சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக் காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மோ டென்றான்” “யாதினும் இனிய நண்ப” என்று அழைத்தமையால், குகன் இராமனுக்குப் பொன்னினும் இனியன் ஆனான்; புகழினும் இனியன் ஆனான்; மற்றெதனினும் இனியன் ஆனான் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. இங்ஙனம் ஆட்கொள்ளப்பட்ட குகன் அகமும் முகமும் மலர்ந்தான். அன்றிரவு நாணற் பாயலில் இராமனும் சீதையும் படுத்துறங்க, இலக்குவன் வில்லை யூன்றிய |