கொண்டு இறைவனை நினைந்துருகிய அன்பர் நிலையும் அறியத் தக்கதாகும். அன்பைப் பெருக்கி இன்பப் பேறடையக் கருதிய ஆன்றோர் இவ்விரு அடியாரது அன்பின் பெருமையை நினைந்து, “எற்றே இவர்க்கு நாம்” என்று உள்ளம் உருகினர். முற்றத் துறந்த பட்டினத்தடிகள் என்று தமிழகம் போற்றிப் புகழும் பெரியார் கண்ணப்பனது அருஞ்செயலை நினைந்து கரைந்து உருகுவாராயினர். காளத்தி மலையிலமர்ந்த ஈசனுக்கு ஆளாகக் கருதிய அடிகள், “வாளால் மகவரிந்து ஊட்டவல் லேனல்லன் மாதுசொன்ன சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன் தொண்டுசெய்து நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேனல்லன் நான்இனிச்சென்று ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பருக்கே” என்று அகம் குழைந்தார். “ஐயோ! பெற்ற பிள்ளையை வாளாலரிந்து இறைவனுக்கு இன்னமுதூட்ட வல்லேனா? திருநீலகண்டன் மேல் மனையாள் வைத்த ஆணை கடவாது இளமையிலேயே ஐம்பொறிகளையும் வென்று, இன்பம் துறக்க வல்லேனா? ஆறு நாள் பழகிய பான்மையில் ஆராத அன்பு வாய்ந்து, கண்ணைப் பறித்து, இறைவன் கண்களில் அப்ப வல்லேனா? இத் தகைய பொக்கனாகிய யானும், மெய்யடியார்போல் நடித்து, வீடகத்தே புகுந்திட விழைகின்றேன்” என்று உள்ளத் துறவமைந்த உயரிய |