“நெல்லும் உயிரன்றே ; நீரும் உயிரன்றே ; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று புறப்பாட்டிலே கூறப்படுகின்றது. இப்பாட்டின் சொல்லும் பொருளும் கம்பரால் போற்றப்பட்டுள்ளன. இராமனுடைய இனிய பண்புகளை எடுத்துரைக்கப் போந்த கம்பர். “கண்ணிலும் நல்லன் ; கற்றவர் கற்றிலாதவரும் உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்” என்று அருளிப் போந்தார். இன்னும் புறநானூற்றுப் பாடல்களைத் தழுவி எழுந்த கவிகளும் நூல்களும் பலவாகும். தமிழறிஞரது துயரைத் தீர்ப்பதற்காகத் தன் தலையைக் கொடுக்க முன்வந்த குமண வள்ளலின் பெருமையை விளக்கிப் பாடினார் ஒப்பிலாமணிப் புலவர்: “அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய் இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய் தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன் விலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே” என்னும் பாட்டு, புறநானூற்றுப் பாடலொன்றைத் தழுவி எழுந்ததாகும். இன்னும், பாரி வள்ளலைக் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களையே பெரிதும் ஆதாரமாகக் கொண்டு, ‘பாரி காதை’ என்னும் பனுவல் இக்காலத்தில் தோன்றியுள்ளது. ஆகவே, புறநானூறு, தமிழ்ச்சுவை, தேரும் மாணவர்க்கு ஓர் இலக்கியக் கேணியாம்; பழமையைத் துருவுவார்க்குப் பல பொருள் நிறைந்த பண்டாரமாகும்; தமிழ்நாட்டுத் தொண்டர்க்கு விழுமிய குறிக்கோள் காட்டும் மணிவிளக்காகும். இத்தகைய பெருநூலைத் தமிழ் மக்களாகிய நாம் போற்றிப் படித்து இன்பமும் பயனும் எய்துவோமாக. |