பக்கம் எண் :

236தமிழ் இன்பம்

‘அம்மே!      மந்தமாருதம்   வளரும்   மலை   எங்கள்   மலையே,
வடகலையும்   தென்கலையும்  வளர்ந்தோங்கு  மலை எங்கள் மலையே,
பொன்னும்    மணியும்    பொருந்திய    மலை   எங்கள்   மலையே.
அங்கயற்கண்   அம்மையின்   அருள் சுரந்து பொங்கும் மலை  எங்கள்
மலையே.   இவ்வாறு   இறையோரும்  மறையோரும் விரும்பி உறையும்
இணையற்ற   நாடு   எங்கள்  நாடேயாகும்’  என்று  பொதிய நாட்டின்
பழம்பெருமை கூறக் கேட்ட குற்றால வஞ்சி சிறிது தலை குனிந்தாள்.

நாட்டின்      பெருமை  கூறிப்  பொதியமலைக் குறத்தியை வெல்ல
இயலாதென்றறிந்த    குற்றாலக்    குறமாது   ஆற்றின்  பெருமையால்
அம்மாதை   வெல்லக்   கருதினாள்.   ஞானிகளும்  அறியாத  சித்திர
நதியின்  பிறப்பையும்   சிறப்பையும்   குறவஞ்சி கூறத் தொடங்கினாள்.
திரிகூட   மலையில்   தேன்   அருவித்  திரை  எழும்பிச்  சிவகங்கை
ஆறாய்ப் பரந்து,  செண்பக  அடவியின் வழியாய்ச் சென்று, பொங்குமா
கடலில்  வீழ்ந்து,  சித்திர  நதியாய்ப் பாயும் சிற்றாற்றின்  பெருமையைக்
குறவஞ்சி நிறைந்த சொற்களால் போற்றிப் புகழ்ந்தாள்.

“நவநிதியும் விளையுமிடம் 
   அவிடமது கலந்தால்

நங்கைமார் குரவையொலிப்

   பொங்குமா கடலே

பொங்குகடல் திரிவேணி

   சங்கமெனச் செழிக்கும்

பொருந்துசித்ர நதித்துறைகள்

   பொன்னுமுத்துங் கொழிக்கும்”