பக்கம் எண் :

பாரதியார் பாட்டின்பம்241

இத்    தகைய செந்தமி ழன்னையை  நாம் போற்றுவது மெய்யாயின்
அத்   தாயின்    அருந்தவப்   புதல்வரை  ஆர்வத்தோடு  பேணுதல்
வேண்டும்.    காவிய    நயங்களெல்லாம்  கனிந்தொழுகும்  நூல்செய்த
கம்பரை     நாம்    இன்னும்   உரிய   முறையில்   போற்றவில்லை.
தன்னேரிலாத   தெள்ளுதமிழ்ப்  புலவராய வள்ளுவரை இன்னும்  தமிழ்
நாடு   தக்க    முறையில்   தெரிந்துகொள்ளவில்லை.  அருந்  தமிழ்ச்
செல்வமே   பெரும்   பொருட் செல்வத்திலும் சிறந்த தென்று தெளிந்து
இளமையிலேயே   துறவறம்   பூண்டு சிலம்பு பாடிய இளங்கோவடிகளது
பெருமையை    இன்னும்    உணர்ந்தோமில்லை;  தமிழ்மொழிக்  குற்ற
குறையைத்   தமக்குற்ற  குறையாகக் கருதி, மனமும் மெய்யும்  வருந்திய
மணிமேகலை   ஆசிரியரது  மாண்பை  அறிந்தோ  மில்லை.  நெற்றிக்
கண்ணைக்    காட்டினும்   குற்றம்   குற்றமே   என்று    முக்கணான்
முன்னின்று   மொழியும்   கலைபயில்  தெளிவும், கட்டுரை வன்மையும்
வாய்ந்த   பொய்யடிமை   யில்லாப் புலவரைப் போற்றுகின்றோமில்லை.
முத்தமிழ்த்   துறையின்  முறைபோகிய மற்றைய உத்தமக்  கவிகளையும்
நல்லிசைப்   புலமை   மெல்லியலாரையும்  மனக் கோவிலில் அமைத்து
மகிழ்கின்றோமில்லை.     ஏனைய     நாடுகள்    தம்   புலவரையும்,
கவிஞரையும்    போற்றுகின்ற  பெருமையையும்,  நம்  தமிழ்    நாடு
தமிழறிஞரைப்    புறக்கணிக்கின்ற    சிறுமையையும்   அறிவோமாயின்,
பிறரது  ஏற்றமும்   நமது  இழிவும் வெள்ளிடை மலைபோல் விளங்கும்.
இத்   தகைய    பொருந்    துயிலினின்றும்  விழித்து  அருந்தமிழைப்
போற்றும் நாள் எந்நாளோ, அந்நாளே நம் நாட்டுக்கு நன்னாளாகும்.