அறிவினுக்கறிவாய் நின்று, புன்னெறி விலக்கி நன்னெறி காட்டும் தெய்வம் கலைத்தெய்வமே. மேலோரென்றும் கீழோரென்றும் எண்ணாது, செல்வரென்றும் வறிஞரென்றும் கருதாது, முதியரென்றும் இளையரென்றும் பாராது, ‘எக்குடிப் பிறப்பனும் யாவரே ஆயினும் அறிவினை விரும்புவோர் அனைவரும் வருக’ என்று அருள் கூர்ந்து அழைத்திடுந் தெய்வம் அறிவுத் தெய்வமே யன்றோ? இத் தகைய தெய்வத்தை நிறைமொழி மாந்தர் மறைமொழியாற் போற்றினார்கள். அறிவறிந்த மாந்தர் ஆண்டுதோறும் எண்ணும் எழுத்தும் அமைந்த ஏடுகளை வரிசையாக அடுக்கிக் கலைவிழா எடுத்தார்கள்; விரையுறு நறுமலர் தூவி வணங்கினார்கள்; வண்ணமும் சாந்தமும் வழங்கினார்கள். இவ்வாறு ஆண்டுதோறும் நிகழும் நாமகள் விழாவினைக் கண்ட பாரதியார், “செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்! சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்! வந்த னம்இவட் கேசெய்வ தென்றால் வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்! மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை வரிசை யாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை யிடுவோர் சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்” என்று சாற்றியருளினார். ஆண்டிற்கொரு முறை கலையேடுகளை எடுத்தடுக்கி மலர்மாலை புனைவதும், சந்தனம் சாத்துவதும், மந்திரம் முரல்வதும், வந்தனை புரிவதும், உயரிய வழிபாடென்று கருதுதல் பெருந்தவ |