பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
137

இன

    இனி, ஆங்கிலத்தில் இல்லாத உயிர்மெய்யெழுத்துகள் தமிழில் இருப்பதால், எழுத்துகள் பல்கித் தட்டச்சடிப்பில் மிகுந்த இடர்ப்பா டுண்டாக்குகின்றன வென்றும், தொலைவரி யடிப்புக் காலத்தை நீட்டிக் கின்றனவென்றும், குறைகூறித் தமிழெழுத்துகளைக் குறைக்க வேண்டும் என்பர் சிலர்.

    வடமொழி நெடுங்கணக்கிலும் அதைப் பின்பற்றிய வடநாட்டு மொழிகளிலும் திராவிடமொழிகளிலும் உள்ள வண்ணமாலைகளிலும், வல்லினம் ஐந்தும் நந்நான்கு வகையா யிருப்பதொடு, சகரத்திற்கினமான இசுப்பொலிகளும் (sibilants) மூன்றாக வுள்ளன.

    உயிர்மெய்களின் உகரக்குறி, எழுத்து வடிவிற்கேற்பத் தெலுங்கிலுங் கன்னடத்திலும் இருவேறு வகையாயும், மலையாளத்தில் நால்வேறு வகையாகவும் உள்ளது.

    சேமிய மொழிகளில் உயிர்மெய்க்குத் தனிவடிவில்லாவிடினும், மெய்வடிவு சொன் முதலிடைகடை யென்னும் மூவிடத்திற்கேற்பப் பெரும்பாலும் வேறுபடுகின்றது. மேலும், பற்பல எழுத்துகளின் வடிவுகள் ஒவ்வொன்றாகவே யிருந்து, புள்ளிகளின் மேல்கீழ்உள் என்னும் இடவேறுபாட்டாலும், ஒன்று இரண்டு மூன்று நான்கு என்னும் தொகை வேறுபாட்டாலுமே, வேறு பகுத்தறியப்படுகின்றன. இனி, அ இ உ என்னும் முதன் மூவுயிர்க்கும் தனி வடிவுகளில்லையென்று கருதப்படுகின்றது. ஒரு குறுங்கீச்சு மேலும் கீழும் தடித்தும் எழுதப்படுவதால், முறையே முதன்  மூவுயிர்க் குறில்களும் குறிக்கப்படுகின்றன. அவற்றின் நெடில்களைக் குறிக்க 'அலிப்' (அலெப்), 'வா,' 'யே' என்னும் எழுத்துகள் முறையே சேர்க்கப்படுகின்றன, 'வா' என்னும் ஒரேயெழுத்து வகரமாகவும் உகரமாகவும், 'யே' என்னும் ஒரேயெழுத்து யகரமாகவும் இகரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

    ஆங்கில வண்ணமாலையின் ஒழுங்கின்மை அனைவரும் அறிந்ததே.

                 In the English tongue we speak
                 Why is break not rhymed with freak
                 Well you tell me why it's true
                 We say sew but likewise jew. 
 
                 Beard sounds not the same as heard
                 Cord is different from word
                 And since pay is rhymed with say
                 Why not paid with said I pray.