பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
138

New Page 1
               Cow is cow but low is low
               Shoe is never rhymed with foe
               And in short it seems to me
               Sound and letter disagree.

என்று Lord Cromer  என்னும் ஓர் ஆங்கிலப் பெருமகனாரே பாடியுள்ளார். ஆயினும், ஒருவரும் அதைத் திருத்தக் கருதவில்லை.                       

    ணெ ணே றெ றே என்னும் எழுத்துகள் ஈரிடமே கொள்கின்றன. இவற்றை ணொ, ணோ, றொ, றோ என்றெழுதின் மூவிடங் கொள்ளும். கால் சேர்க்காமையால் அவை முடம்பட்டு நடக்க முடியாது வருந்தவுமில்லை; கால்வேண்டுமென்று நம்மிடம் முறையிடவுமில்லை.

    எழுத்து மாற்றம் எவ் வகையிலுந் தமிழுக்குத் தேவையேயில்லை.

    இன்று எழுத்தை மாற்றின், மனையகங்களிலும் அலுவலகங்களிலும் நூலகங்களிலுமுள்ள கோடிக்கணக்கான மரபெழுத்து நூல்களையெல்லாம் மாற்றியாகல் வேண்டும். அவற்றிற்கு ஈடு செய்ய இறைவனும் வரான். புதிய மாற்றெழுத்து நூல்களையெல்லாம் அச்சிட ஒரு தலைமுறையாகும்; கோடிக் கணக்கான பணமுஞ் செலவழியும். அவற்றைக் கொடுக்கும் வள்ளல்கள் இனிமேல்தான் பிறக்க வேண்டும்.

    ஏற்கெனவே யுள்ள நூல்களை வேண்டுமாயின், கரிவலம் வந்த நல்லூரிற் போல் எரியூட்டுவதற்குத் தோன்றியங்கள் (ஆகமங்கள்) துணை செய்யலாம். ஆயின், அதற்கும் ஆரியமறை யோதுவார்க்குப் பணங் கொடுத்தல் வேண்டும்.

    எழுத்து மாற்றுவதால் ஒரு நன்மையுமில்லை. கேடோ அளவற்ற தாகும்.

    இனி, எழுத்து மாற்றமும் ஒருவகைப்பட்டதன்று. பெரியார் எழுத்துமுறை ஒன்று; புலவர் குழந்தை எழுத்துமுறை ஒன்று; பிறர்கூறும் எழுத்துமுறை வெவ்வேறு. உயிர்மெய் வரிவடிவுகளை, ஒருவர் கிரந்தம் போற் புணர்க்க வேண்டும் என்பர்; ஒருவர் வடமொழிபோற் புணர்க்க வேண்டும் என்ப. ஒருவர் பிராமிபோற் புணர்க்க வேண்டும் என்பர்; பிறர் வெவ்வேறு வகையிற் புணர்க்க வேண்டும் என்பர். ஒருசிலர் உயிர்மெய்யே வேண்டியதில்லையென்றும், ஆங்கிலம்போல் மெய்யையும் உயிரையும் அடுத்தடுத் தெழுதினாற்போதும் என்றும் கூறுவர்.

    இங்ஙனம் வடிவுபற்றிய கருத்து வேறுபாடுகள் ஒருபக்கம் இருக்க, சிலர் பிறமொழிச் சிறப்பெழுத்துகளைத் தமிழிற் புகுத்த வேண்டுமென்பர். அவரும், வடமொழிச் சிறப்பெழுத்துகளை மட்டும் புகுத்த வேண்டும் என்பாரும், ஆங்கிலச் சிறப்பெழுத்துகளையும் புகுத்த வேண்டும் என்பாரும், பிறமொழிச் சிறப்பெழுத்துகளையுஞ் சேர்க்கவேண்டும் என்பாருமாய்ப் பல திறத்தர்.