பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
141

சற

சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும், ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும், அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தானியத்தை யெதிர்த்ததிலும் பிராமணியத்தை யெதிர்த்ததே பேராண்மை.

    கலப்பு மணம், பகுத்தறிவுச் செயல், தன்மான வாழ்வு முதலிய உயிர்நாடிக் கொள்கைகளை விட்டுவிட்டு, எழுத்து மாற்றம் ஒன்றையே மேற்கொள்வது, பண்டத்தை விட்டுவிட்டுப் படிவத்தைப் பற்றுவதே யாகும். தனித்தமிழை வெறுப்பவரும் உண்மையான வரலாற்றை ஒப்புக் கொள்ளாதவரும் இந்தியைப் பொதுமொழியாக ஏற்பவருமான வையா புரிகளுடன் கூடிக்கொள்வதும், தமிழுக்கு மாறான ஆரிய அமைப்பகங் களுடன் ஒத்துழைப்பதும், மூலமும் படியும் என்பதை அசலும் நகலும் என்றெழுதுவதும், பகுத்தறிவுக் கொள்கையின் அல்லது தன்மான வாழ்வின்பாற்பட்டன வாகா.

    பெரியாரின் நடத்தையைப் பின்பற்றாது, பெரியார் விழாக் கொண்டாட்டத்தில் ஊர்தொறும் ஊர்வலத்திற் கலந்துகொள்வதும், விடிய விடியச் சொற்பொழிவாற்றுவதும், பெரியார் படிமைக்கு மாலையணிவதும், பெயர் விளம்பரத்திற்கே யன்றி வேறெதற்குப் பயனாம்?

    இதுகாறும் தமிழ்நாட்டில், தமிழர்க்கு மூவேறு வகையில் வழிகாட்ட மூவேறு பெரியார் தோன்றியுள்ளனர். அவருள் ஒருவர் ஈ.வே. இராமசாமிப் பெரியார். எழுத்து மாற்றத்தையே அவர் தொண்டாகக் காட்டுபவர், அவர் பெருமைக்கு இழுக்கே தேடுபவராவர்; தம் சிறு கொள்கைக்குப் பெரு வெற்றி பெறவே, பெரியார் விழாவைப் பெருவாய்ப்பாகக் கொண்டுள்ளனர்.

    அறநூற் பெரியாரும் தனித்தமிழ்ப் பெரியாரும் தன்மானப் பெரியாரும் ஆகிய,

முப்பெரியார் அகவல்

 
     தமிழகத் தீரே தமிழகத் தீரே
     மொழிவர லாறு மொழிவது கேண்மின்
     பிராமணி யம்மெனும் பெருங்கொடு நஞ்சு
     நாவலம் முழுதும் நலங்கெடப் பரவிப்
     பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்
     நைந்தமை தடுக்க நன்மருத் துவராய்
     வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
     தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்
     நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
     நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்