பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
36

New Page 1
     வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும்

(735)

என்று தொல்காப்பியர் பொதுப்படவே தொகுத்துக் கூறியிருத்தலானும்; 'கின்று' என்னும் இடைநிலைபெற்ற நிகழ்காலவினை தொல்காப்பியர் காலத்து உண்டோ என்று சிலர் மருளவும், இல்லை என்று சிலர் பிறழவும் இடமாகின்றது.

    தொல்காப்பியர் காலத்தில் முக்கால வினைகளும் இருந்தன என்பதும், நிகழ்காலத்திற்குத் தனிவினை இருந்திருத்தல் வேண்டும் என்பதும்,

     காலந் தாமே மூன்றென மொழிப

(தொல். 684)

   
     இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா  
     அம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்

(தொல். 685)

   
     முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை  
     எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து  
     மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் 

(தொல். 725)

   
     வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும்  
     ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி  
     இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்  
     விரைந்த பொருள என்மனார் புலவர்

(தொல். 726)

   
     மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி  
     அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி  
     செய்வ தில்வழி நிகழுங் காலத்து  
     மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே

(தொல். 727)

   
     வாராக் காலத்து வினைச்சொற் கிளவி  
     இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும்  
     இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை

(தொல். 730)

   
     இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்  
     சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி

(தொல். 732)

   
     ஏனைக் காலமும் மயங்குதல் வரையார்

(தொல். 733)

என்னுந் தொல்காப்பிய நூற்பாக்களானேயே பெறப்படும்.

    இனி, சேனாவரையரும்,

    உண்கின்றனம், உண்கின்றாம், உண்கின்றனெம், உண்கின்றேம், உண்கின்றனேம்;  உண்கின்றன, உண்கின்ற; நடக்கின்றது, உண்கின்றது என்னும் கின்றிடைநிலை வினைமுற்றுகளை நிகழ்கால வினைமுற்றுகளாகத் தம் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார் (தொல். வினை. 15, 19, 20 உரை).

    பண்டைச் சேரநாடாகிய கேரள அல்லது மலையாள நாட்டில், இறந்தகால நிகழ்கால வினைமுற்றுகள் இன்று பாலீறு நீங்கிப்  பகுதியும் இடைநிலையும் மட்டும் அமைந்த அளவில் வழங்குகின்றன.