பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
38

வினைமுற்றை அடிப்படையாகக் கொண்ட வினையாலணையும் பெயர்கள், மலையாள உலக வழக்கில் இயல்பாக வழங்குகின்றன. ஆதலால், 12ஆம் நூற்றாண்டிற்குமேல் சோழபாண்டித் தமிழரொடு உறவுவிட்டுப் போனபின், சொற்களைக் குறுக்கி வழங்குவதற் கேதுவான வாய்ச்சோம்பலாலும், புலவரின் இலக்கணக் கட்டுப்பாடு அற்றுப் போனமையாலும் குடுதுறு - கும்டும் தும்றும் விகுதி பெற்ற தன்மை வினைமுற்றுகளின் தொடர்ப் பாட்டினாலும், மலையாள நாட்டு மக்கள் வினைமுற்றுகளைப் பாலீறு நீக்கி வழங்கத் தலைப்பட்டுவிட்டனர்.

     அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும்  
     உம்மொடு வரூஉங் கடதற என்னும்  
     அந்நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்  
     பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே

(தொல். வினை. 5)

   
     கடதற என்னும்  
     அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு  
     என்ஏன் அல்என வரூஉம் ஏழும்  
     தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே

(தொல். வினை. 6)

என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டிற்கு முந்திய தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டிருப்பதாலும், குடுதுறு - கும்டும் தும்றும் ஈற்றுத் தன்மை வினை முற்றுகள் நெடுகலும் செய்யுளில் ஆளப்பெற்று வந்திருப்பதாலும், முற்காலத்தில் பாலீறில்லா முடிவிலேயே தமிழ் வினைமுற்று வழங்கி வந்திருப்பதாகத் தெரிகின்றது. இதுவே மொழிநூற்கும்  பொருந்தும் முடிபாகும். ஆயினும், மலையாள நாட்டில் பாலீற்று வினைமுற்றே அவ்வீறு நீங்கிப் பழைய வடிவில் வழங்கி வருகின்றது.

    நிகழ்கால வினையாலணையும் பெயர்களும் தொழிற்பெயர்களும் பெயரெச்சங்களும் உள்ள, சில மலையாளப் பழமொழிகளும் சொற்றொடர்களும் வருமாறு:

     கடிக்குந்நது கரிம்பு, பிடிக்குந்நது இரிம்பு.  
   
     அலக்குந்நோன்*றெ கழுத போல.  
   
     பாபம் போக்குந்நோந் ஆர்?  
   
     பாரம் சுமந்நும் நடக்குந் நோரே!

(மத். 11 : 23)

   
     அஞ்சு எரும கறக்குந்நது அயல் அறியும், கஞ்சி வார்த்துண்
    ணுந்நது நெஞ்சு அறியும்.
 
     அந்நந்நு வெட்டுந்ந வாளிந்நு நெய்யிடுக.
 
     உறங்ஙுந்ந பூச்ச எலிபிடிக்க இல்ல.

    மலையாளத்தில் றன்னகரம் இல்லை. ஆயினும், மலையாள ஒலியைக் குறித்தற்பொருட்டு இங்கு றன்னகரம் ஆளப்பெற்றது.)