பக்கம் எண் :

இலக்கணக் கட்டுரைகள்
 
40

     எ-டு : தமிழ் மலையாளம்
     
  நான் ஞான்
  நாங்கள் ஞங்கள்
  தந்து தந்நு
  துடங்கி துடங்ஙி
  வீழ்ந்து வீணு

    நான் என்னுஞ் சொல்லின் முதலெழுத்து மெல்லினமேயாயினும், அது மேலும் ஒருபெரு மெல்லொலியான ஞகரமாகத் திரிந்திருப்பது,    மலையாள மக்கள் பேச்சின் மெல்லோசை மிகுதியைத்  தெளிவாக எடுத்துக் காட்டும். இங்ஙனம் மூக்கொலிகள், சேரநாட்டுத் தமிழிற் பேராட்சிபெற்று வந்திருப்பினும், நூன்மொழி அல்லது இலக்கிய மொழி செந்தமிழாகவே யிருத்தல் வேண்டுமென்னும் இலக்கண மரபுபற்றி, சேரநாட்டு இலக்கியமும் செந்தமிழாகவே இருந்து வந்திருக்கின்றது. கொங்குநாட்டைச் சேர்ந்த வடார்க்காட்டுப் பாங்கரில் இன்று கொச்சைத் தமிழே வழங்கிவரினும், அங்கும் இலக்கியத் தமிழ் செந்தமிழாகவே யிருந்துவருதல் காண்க.

     வடார்க்காட்டுத் தமிழுக்கு எடுத்துக்காட்டு வருமாறு:
 
     இசுத்து இசுத்து ஒச்சான். (இழுத்து இழுத்து உதைத்தான்.)
 
     கொயந்த வாயப்பயத்துக்கு அய்வுது. (குழந்தை வாழைப்பழத்திற்கு
     அழுகிறது.)
 
     பசங்க உள்ளே துண்ராங்க. (பையன்கள் உள்ளே தின்கிறார்கள்.)
 
     கண்ணாலம் மூய்க்கணும். (கல்யாணம் முடிக்கவேண்டும்)
 
     வந்துகினு போயிகினேக் கீரான். (வந்துகொண்டு போய்க்கொண்டே
     யிருக்கிறான்.

    சேரநாட்டுச் சொற்கள் பல செந்தமிழுக் கொவ்வாவிடினும், திசைச்சொல் வகையில் அவற்றுள் ஒன்றிரண்டு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன.

     இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்  
     றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

(தொல். 880)

   
     செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்  
     தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி

(தொல். 883)

என்று திசைச்சொல்லும் செய்யுளுக்குரியதென்றும், அது கொடுந் தமிழ்நாட்டு வழக்கென்றும்,  தொல்காப்பியத்திற் கூறப்பட்டிருத்தல் காண்க.

    நிகழ்கால வினையாலணையும் பெயர்கள் சேரநாட்டியல்புபடி,  முதலாவது பின்வருமாறு திரிந்திருத்தல் வேண்டும்.