பொருளிலக்கண முடைமையால் தமிழ் மிக்க இலக் கண வரம்புள்ளது என்று முன்னோர் கொண்டமையை, “கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ” என்ற பரஞ்சோதி முனிவர் கூற்றாலுணரலாம். பொருளிலக்கணத்தில், பொருள்கள் எல்லாம் அகம் புறம் என இரண்டாகவும், அவற்றுள், அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுக்கப்படும். ஒழுக்கநூற் பாகுபாடான அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள்களுள் இன்பம் இன்னவாறிருந்த தென்று பிறர்க்குப் புலனாகும்படி எடுத்துக்கூற இயலாத வாறு, அகத்தானாயே உணர்ந்து நுகரப்படுதலின் அக மெனப்பட்ட தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப் படக்கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப் பட்டதென்றும் கூறப்படுகின்றது. சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவி யிருவரிடையே யாதலாலும், அன்பிற்கெதிரான பகையாலேயே போர் நிகழ்வதாலும் இவ் வுரை கோளும் ஒருவாறு பொருந்துவதே. மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனை யிரண்டையும் பற்றியே யிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழியால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்து கொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இது
|