6. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும். 7. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை. 8. முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை. 9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை. 10. பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன. 11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை. 12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை. 13. குறிப்புவினை வடமொழியில் இல்லை. 14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும். 15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும். 16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியாயிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும். 17. வினைத்தொகை வடமொழியில் இல்லை. 18. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை. 19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வட மொழியில் இல்லை. 20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை.
|