பக்கம் எண் :

மொழிநூல்99

அ, இ, உ, எ என்னும் நான்குயிர்களும், முறையே சேய்மைச் சுட்டிற்கும், அண்மைச்சுட்டிற்கும், இடைமைச் சுட்டிற்கும், வினாவிற்கும் ஆகி, படர்க்கைப்பெயர் முன்னி லைப் பெயர் இடைமைப்பெயர் வினாப்பெயர் என்னும் நாற்பாற் பெயர்களும் அமைந்தது, உயிரெழுத்துகளின் வரிசை முறையை ஏதுவாகக் கொண்டதென்று ரெட்டியார் கூறியுள்ளார். இதன் தவறு பின்னர் விளக்கப்படும். ஆயினும் இங்கொரு செய்தியைமட்டும் கூற விரும்புகின்றேன். அதா வது, மேற்கூறிய நாற்பாற் பெயர்களும் அரிவரித் தோற்றத் திற்கு (எழுத்திற்கு வரிவடிவம் தோன்றுதற்கு) முந்தின வென்பதே.

ரெட்டியார் இலக்கணக் கூற்றுகளுள் பிற பிழைகளு முள. அவற்றைப் பின்னர் இந் நூலிற் கூறுபவற்றினின்றும் அறிந்துகொள்க.

7. மொழிநூற் பயிற்சிக்கு மொழிகளின் இலக்கணமும் அகர முதலியும் (அகராதியும்) போதிய கருவிகளாம்.

ஒரு சொல்லின் பொருளையும் மூலத்தையும் அறிதற்கு, இலக்கணமும் சொல்லியலும் (Etymology) தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், போலியொப்புமையால் வழு முடிபிற் கிடமாகும்.

கண்டி, பாராளுமன்று என்னும் தமிழ்ச்சொற்கள், condemn, Parliament என்னும் ஆங்கிலச் சொற்களுடன் ஒலியிலும் பொருளிலும் ஒத்திருக்கின்றன. ஆனால், சொல்லி யலை நோக்கின், அவை சிறிதும் தொடர்பற்றவை என்பது தெளிவாகும்.

Condemn - L. condemno, from con intensive, damno to damn.

Parliament - Lit. 'a parleying or speaking,' Fr. parlement - parler, to speak, ment, a Lat. suffix.

பாராளுமன்று என்பது பார், ஆளும், மன்று என்ற முச்சொற்களாலானதாயும், Parliament என்பது ஒரே சொல் லாயுமிருத்தல் காண்க.

சொற்கள் பெரும்பான் மொழிகளிற் காலந்தோறும் வேறுபடுகின்றமையின், அவற்றின் மூலவடிவையறிந்தே பொருள் காண வேண்டும்.