நூல்வழக்கற்றன. முன்னிலைப் பெயர்கள் வினைமுற்றீறுகளாகும் போது பின்வரும் வடிவங்களையடையும். ஈ (முன்னிலையொருமைப்பெயர்) - ஏ - ஐ-ஆய். நீ - தீ - தி. கா : வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய் (இ. கா.). ஒ.நோ: சீ - சே - சை. கழை - கழாய். ஐ = அய் - ஆய். (செய்தீ) - செய்தி (ஏவலும் நிகழ்கால ஒருமையும்). வா, தா என்பவற்றின் கால்மேல், வேறுவகையாய் வந்த புள்ளியை எழுத்துப்புள்ளியென் றெண்ணி, முதலாவது வர் தர் என்றும், பின்பு வரு தரு என்றும், ஏட்டைப் பார்த்துப் பெயர்த் தெழுதினவர் தவறு செய்ததாகத் தெரிகின்றது. இறந்த காலத்தில் இவ் வினைகள் வந்தான் தந்தான் எனக் குறுகிமட்டும் நிற்றல் காண்க. ந - த, போலி. ஒ.நோ: நுனி - நுதி. ஆன்மா - ஆத்மா (வ.) இடைமைப் பெயர் ஊ இடைமைச்சுட்டு. ஊ + ன் = ஊன் (வழக்கற்றது). ஊ + ம் = ஊம் (வழக்கற்றது). படர்க்கைப் பெயர் ஆ படர்க்கைச்சுட்டு. ஆ + ன் = ஆன் - தான். ஆ + ம் = ஆம் - தாம். தாம் + கள் - தாங்கள். மூவிடப்பெயர்களும் வேற்றுமைப்படும்போது பின் வருமாறு திரியும். யான் - என், யாம் - எம், யாங்கள் - எங்கள், நான் - (நன்), நாம் - நம், நாங்கள் - நங்கள், நீன் - நின், (நூன்) - நுன் - உன், நீம் - (நிம்), (நூம்) - நும் - உம், நீங்கள் - (நிங்கள்), (நூங்கள்) - நுங்கள் - உங்கள், தான் - தன், தாம் - தம், தாங்கள் - தங்கள். பிறைக்கோட்டு ளுள்ளவை இதுபோது தமிழில் இருவகை வழக்கிலும் வழக்கற்றவை. இவற்றுக்குப் பதிலாக இவற்றை யொத்த பிறசொற்களே வழங்குகின்றன. நன் என்பதற்கு என் என்பதும் நங்கள் என்பதற்கு எங்கள் என்பதும் வழங்குதல் காண்க.
|