இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம். (1) ஈர்தல் அறுத்தல். இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு. ஈருள் = ஈர்தல், ஈருள் - (இருள்) - (இரள்). (2) இருமை = கருமை, இருள். இரா, இருள், இருட்டு, இரும்பு, இருந்தை, இறடி முதலிய சொற்களிலெல்லாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர் - எர் - என் - ஏன். கா : எருமை, ஏனம். இருள் அகவிருள் புறவிருள் என இரண்டாதலின், இரண்டாம் எண் இருமை யெனப்பட்டது. இங்ஙனம் கூறுவது பொருட்டொகை (பூதசங்கியை) முறையாகும். ஒன்பதுவரை ஏனை யெண்களும் இம்முறை பற்றியவையே. மூன்று: மூ = மூக்கு. மூக்கின் பக்கங்கள் மூன்றாயிருத்தல் காண்க. மூன்று என்னும் வடிவம் ஒன்று என்பதனுடன் எதுகை நோக்கியது. நான்கு: நாலம் - நாலு - நாலுகு - நால்கு - நான்கு. நாலம் - ஞாலம் (பூமி). ந - ஞ, போலி. உலகத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வந்ததின் காரணம் முன்னர்க் கூறப்பட்டது. நாலம் என்னும் உலகப்பெயர் அதன் பகுதியையும் குறிக்கும். “ மைவரை யுலகம்” , தமிழு லகம் என்னும் வழக்குகளை நோக்குக உலகம் இயற்கையில் நால்வகையா யிருத்தலின், நாலம் என்னும் பெயர் நான்காம் எண்ணைக் குறித்தது. உலகம் நானிலம் எனப்படுவதையும் நோக்குக. ஐந்து: கை - ஐ. ஐ + து = ஐது - ஐந்து. ஒரு கையின் விரல்கள் ஐந்து. பொருள் விற்பனையில் கை என்னும் சொல் ஐந்து என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது. ஆ : இதன் வரலாறு தெளிவாய்ப் புலப்படவில்லை.1
1. ஆ - முற்செலற் கருத்து. ஆதலை முன்வரிசை (க.). ஆதிகேசவலு முற்படு (தெ.) ஆகே முன்னால்(இ.) - இரா.மதிவாணன்
|