“இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சத்திராவிடமெனவும் வட நாட்டார் உரைப்பவாகலான், அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க.” “அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா என்றவாறு.” “குடாவடியுளியம் என்றவழி, குடாவடி என்பது குடகத் தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற் கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழி கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலுங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்த வழிக் கண்டுகொள்க” என்று கூறியிருத்தல் காண்க.1 தெலுங்கு கன்னட முதலியவை பிற்காலத்தில் பிறமொழிகளாய்ப் பிரிந்துபோனபின்பு, அவற்றின் முன்னை நிலையையுணராது அவை வழங்கும் நாடுகளையும் அயன் மொழி நாடுகளையுஞ் சேர்த்துக் கொடுந்தமிழ்நாடாகக் கூறினர் பவணந்தியார், “செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” என்று. தமிழொழிந்த பதினெண் நிலங்களை, “சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகங் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கங் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே” என்னுஞ் செய்யுளானறிக. தெலுங்கு கன்னடம் முதலியவை தமிழினின்றும் பிரிந்து போனபின்பே, பொங்கர்நாடு ஒளிநாடு முதலிய பழஞ்செந்தமிழ்
1. தொல். எச்ச. நூ. 1, 4 உரை.
|