பக்கம் எண் :

58ஒப்பியன் மொழிநூல்

பிள்ளையார் என்று முதலாவது முருகனுக்குப் பெயரிடப்பட்டது. பின்பு ஆனைமுகத்தர் மூத்த பிள்ளையார் எனப்பட்டார். இப்போது, மூத்த பிள்ளையாரே பிள்ளையார் எனப்படுகிறார்.

ஓங்கார வரிவடிவம் யானை வடிவுபோ லிருத்தலாலும், கயமுகன் என்னும் அசுரனைக் கயமுகத்தொடு சென்ற சிவ ஆற்றல் கொன்ற தென்னுங் கதையாலும், பிள்ளையார் என்ற தெய்வம் தோற்றுவிக்கப்பட்டது. கணபதி (பூதகணங்க ளுக்குத் தலைவர்) என்னும் பெயர் சிவனுக்கும் ஏற்றலாலும், சிவனுக்கும் பிள்ளையாருக்கும் முக்கண் கூறப்படுவதாலும், அவ் விருவரும் ஒருவரே யென்பதுணரப்படும்.

இங்ஙனமே பிறதெய்வங்களும் ஒவ்வோர் காரணம் பற்றித் தோற்றுவிக்கப்பட்டன வாகும்.

பிள்ளையார் வணக்கம் கடைக்கழகக்காலத்திற்கு முந்தியிருந்ததாகத் தெரியவில்லை. முருகனுக்குப் பிள்ளையார் உதவினதாகக் கந்தபுராணங் கூறுவது களிறுதரு புணர்ச்சியே யன்றி வேறன்று.

சிவபெருமானுக்குப் பகவன், ஐயன் என்று பெயர்களுண்டானமையின், காளிக்குப் பகவதி, ஐயை என்று பெயர்களுண்டாயின. பகவன் என்னும் பெயருக்கு அறிவு, திரு, ஆட்சி, ஆற்றல், அவாவின்மை, புகழ் என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறப்படுகிறது. சிலர் பகம் என்பது குறி (இலிங்கம்)யென்றும், பகவடிவிற் குறிக்கப் படும் கடவுள் பகவன் என்றுங் கூறுகின்றனர். இருபாற் கூட்டத்தால் உயிர்கள் தோன்றுவதாலும், கடவுளிடத்தில் தாய் கூறும் தந்தை கூறும் உள்ளன என்னுங் கருத்தில், சிவபிரானை அம்மையப்பன், மாதொருபாகன், மங்கைபங்கன் முதலிய பெயர்களால் அழைப்பதாலும், வழிபடப்படும் சிவவுரு இலிங்கப்பெயருள்ள தாயும் இலிங்க வடிவமாயு மிருத்தலாலும், எல்லாவற்றையும் தோற்றுவிக்கும் ஒரு மூல ஆற்றலைக் குறிவடிவால் முன்னோர் குறிப்பித்தார் என்று கொள்ளல் பொருத்தமானதே.

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

(குறள். 355)