பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 57

ஐம்பூதங்களுள் தீயே அறிவு, தூய்மை, நன்மை, அழிப்பு முதலிய பலவகையில் இறைவனைக் குறித்தற்குச் சிறத்தலாலும், அதன் நிறம்பற்றிய சிவம் என்னும் பெயரே முழுமுதற் கடவுட்குச் சிறந்த பெயராகக் கொள்ளப்பட்டது.

சிவம் என்னும் சொல் ருக்வேதத்திற் சேர்க்கப்பட்டது பிற்காலமாகும். அச் சொற்கு மங்கலம் அல்லது நன்மை என்று பொருள் கூறினும், அதுவும் திருமகள் நிறம் சிவப்பு என்னும் கொள்கை பற்றியதே.

சிவபெருமானுக்குச் செம்மணியாகிய மாணிக்கத்தை உவமை கூறுவதாலும், முதன்முதல் சைவத்துறவிகளே நெருப்பின் நிறமான காவியுடையை அணிந்ததினாலும், சிவம் என்னும் சொல்லுக்குச் சிவப்பு என்னும் பொருளே தெளிவாயிருத்தலாலும், சிவம் என்பது தமிழ்த்தெய்வமே யாதலாலும், மங்கலம் அல்லது நன்மை செய்பவன் என்று பொருள் கூறிச் சிவம் என்னுஞ் சொல்லை வடசொல்லாகக் கூறுவது பொருந்தாது.

செம்மை என்னும் நிறம் பற்றிய சொல்லுக்கு, நேர்மை, நேர்மையான ஒழுக்கம் என்று பொருள் வந்தது, துறவிகள் காவியுடை யணிந்ததினாலேயே. செம்மையாயிருத்தல் என்பது, முதலாவது செங்கோலமாயிருத்தல் என்று பொருள் பட்டுப் பின்பு, செவ்வையா யொழுகல் என்று பொருள் பட்டது.

சிவம் தமிழத் தெய்வமேயென்பது, ஆரியர் வருமுன்னமே, மொகஞ்ச தாரோவில் சைவம் வழங்கியதினாலும்,

“மந்திர மாமலை மகேந்திர வெற்பன்”

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”

“பாண்டி நாடே பழம்பதி யாகவும்”

“தென்னா டுடைய சிவனே போற்றி”

என்று மாணிக்கவாசகர் கூறுவதாலும் அறியப்படும்.

முதலாவது ஒரு தெய்வமாயிருந்த சிவத்திலிருந்து, முருகன், பிள்ளையார், சாத்தனார், பைரவன், வீரபத்திரன் எனப் பல தெய்வங்கள் தோற்றுவிக்கப்பட்டன பழமையரால்.