பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் 79

Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க. அவை இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்படும்.

மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது.

மலை + ஆளி = மலையாளி. ஆளி = ஆள். ஒ.நோ: கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி. மலையாளி = மலைநாட்டான்.

மலையாளியின் மொழி மலையாளம். மலையாளி + அம் = மலையாளம். ஒ.நோ: வங்காளி - வங்காளம்.

மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங்கின மேலை விடையூழியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப்பெயரால் அழைத்தனர், அன்றவ் விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின்.

மலைவாரம் - மலவாரம் - மலவார் - மலபார்.

வாரம் = சாய்வு அல்லது சரிவு, ஒ.நோ: அடிவாரம், தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க. நக்கவாரம் - Nicobar. மலைவாரம் - Malabar.

இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்குவழியாயென்பதற்குச் சான்றுகள் :

(1) பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு.

சேரநாடு முதலாவது குடமலைக்குக் கிழக்கில் நிறுவப் பட்டுத் திருச்சிராப்பள்ளிக் கோட்டகையைச் சேர்ந்த கரூர் அதன் தலைநகரானதாகவும், பின்பு சேரன் குடமலைக்கு மேற்கிலுள்ள பகுதியைக் கைப்பற்றி நீர்வாணிகத்திற்கும் சோழ பாண்டியரினின்றும் பாதுகாப்பிற்கும் மேல்கரையில் வஞ்சி நகரையமைத்துக் கரூர் என்றும் அதற்குப் பெயரிட்டதாகவும், பிற்காலத்தில் கீழ்ப்பகுதியைக் காத்துக்கொள்ள முடியாமையால், அது கொங்கு நாடென்று தனி நாடாய்ப் பிரிந்தபின் பழங் கரூர் கைவிடப் பட்டதாகவுந் தெரிகின்றது.