வினையெச்சமே பண்டைத் தமிழில் வினைமுற்றாக வழங்கிற்று. மலையாளத்தில் இன்றும் அங்ஙனமே. இது சேரன் மேல்பாகத்தைக் கைப்பற்று முன்னிருந்த பழந்தமிழ் நிலையைக் குறிக்கும். சேரர் செந்தமிழை வளர்த்தனர்; ஆயினும் அது எழுத்து வழக்கிலேயே சிறப்பா யிருந்திருக்கின்றது. பேச்சு வழக்கில் கற்றோரிடம் வினைமுற்று வடிவும் மற்றோரிடம் வினையெச்ச வடிவுமாக இருவகை வடிவுகளும் வழங்கி யிருக்கவேண்டும். பிற்காலத்தில் செந்தமிழ்ச் சேரமரபின்மையாலும், தமிழொடு தொடர்பின்மையாலும், ஆரிய முயற்சியாலும், பண்படுத்தப்பட்ட செந்தமிழ் வழக்கற்று, பழைய வினையெச்ச வடிவமே வழங்கி வருகின்றதென்க. ஆயினும், ‘வான்‘, ‘பான்‘ ஈற்று வினையெச்சங்கள் இன்றும் வழங்குவதால், சேரநாட்டிற் செந்தமிழ் வழங்கியதை யுணரலாம். கிழக்கு மேற்கு என்னும் திசைப்பெயர்கள், குமரிநாட்டிலேயே அல்லது சேர ஆட்சியேற்பட்டபின் மலையாள நாட்டார்க்குள் தோன்றியிருக்கவேண்டும். (2) குமரிநாட்டில் ஒரு பகுதியின் பெயரான கொல்லம் என்பது, மலையாள நாட்டில் ஓர் இடத்திற்கிடப்பட்டமை. (3) திரிந, மகிழ்நன், பழுநி முதலிய மெலித்தல் வடிவங்கள் செந்தமிழில் வழங்குதல். இவை குமரிநாட்டிலேயே தோன்றின குமரி மலை நாட்டு வழக்காகும். (4) உரி (அரைப்படி), துவர்த்து (தோர்த்து) முதலிய திருநெல்வேலிச் சொற்கள் மலையாளநாடு நெடுக வழங்கல். (5) பாணர் என்னும் பழந்தமிழ்க்குலம் மலையாள நாட்டிலிருத்தல். (6) மலையாளநாட்டில் மாதங்கட்கு ஓரைப் பெயர் வழங்கல். இதுவே பண்டைத் தமிழ்முறை. தமிழ்நாட்டில் இது மாற்றப்பட்டது. திராவிடத்திற்குச் சிறந்த தமிழ்நாட்டையே முதன்முதல் ஆரிய மயமாக்கினர். இது ஒரு வலக்காரம். தமிழ்நாடு ஆரிய
|