பக்கம் எண் :

98நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

2. கதிரவன் வரக் காரிருள் மறைந்தது.

ஆசிரியர் வகுப்பறையில் நுழைய மாணவர் எழுந்தனர்.

இங்கு வினையெச்சங்கள் ஒரே காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைக்
காட்டுகின்றன.

3. மழை பெய்ய நெல் விளைந்தது.

நீங்கள் கூப்பிட நாங்கள் வந்தோம்.

இங்கு வினையெச்சங்கள் காரணத்தைக் காட்டுகின்றன.

4. நெல் விளைய மழை பெய்தது.

கல்வி கற்கப் பணவுதவி கிடைத்தது.

இங்கு வினையெச்சங்கள் காரியப் பொருட்டாய் வந்தன.

5. மழை பெய்யின் நெல் விளையும்.

வெயில் இருந்தால் ஆட்டம் உண்டு.

வெற்றி பெற்றால் பரிசு பெறுவாய்.

படித்தால் தேறுவாய்.

இங்கு வினையெச்சங்கள் நிபந்தனையைக் (Condition)
காட்டுகின்றன.

தமிழ் மொழியில் வினையெச்சங்கள் மிகவும் அற்புதமானவை.
நாம் வினையெச்சத்தை நன்கு கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும்.
மிக நீண்ட இராமாயணக் கதையையோ பாரதக் கதையையோ
வினையெச்சங்களைப் பயன்படுத்தி 10 பக்கம் வரக்கூடிய ஒரே
வாக்கியமாக எழுதலாம்.

ஏவல்வினைமுற்று
(Imperative Verb)

ஏவல்வினை, கட்டளைப் பொருளைத் தரும் வினைமுற்று சொல்.
இஃது உடன்பாட்டு ஏவல்வினை, எதிர்மறை ஏவல் வினை என
இருவகைப்படும்.

செய் - உடன்பாட்டு ஒருமை ஏவல் வினைமுற்று.
செய்யாதே - எதிர்மறை ஒருமை வினைமுற்று.
செய்மின் - உடன்பாட்டுப் பன்மை வினைமுற்று.