|
New Page 3
தென்சொல் வேர்களினின்று நூற்றுக்கணக்கான
திரிசொற்களைத் திரித்தும், சமற்கிருதம் என்னும் விரிவான இலக்கிய மொழியைத் தோற்றுவித்து,
பல்துறைத் தமிழ் முதனூல்களையும் அதில் மொழிபெயர்த்தபின், மூல நூல்களை யழித்து மொழிபெயர்ப்பு
நூல்களையே மூலமாகக் காட்டி, இந்திய நாகரிகம் ஆரியரதென்று மேலையரும் நம்புமாறு செய்துவிட்டனர்.
பிராமணர் தம்மை நிலத்தேவரென்றும்,
தம் இலக்கிய மொழி தேவமொழியாதலாற் பிறமொழியினின்று கடன் கொள்ளாதென்றும் ஏமாற்றியதைப்
பேதை வேந்தரும் பொதுமக்களும் புலவரும் நம்பி விட்டதனால், ஆரியர் சொல்லிற்கும் செயலிற்கும்,
திருவள்ளுவர் காலம் வரை எவ்வகை யெதிர்ப்பும் இல்லாது போயிற்று.
வேதமொழிக்குப் பிந்தினது சமற்கிருதம்.
இரண்டும் எழுத்து மொழியேயன்றிப் பேச்சு மொழியல்ல. இறந்துபட்ட இலத்தீனைக் கற்றுப்
பேசுவதுபோன்றே, பையற் பருவத்தினின்று பத்து அல்லது பதினைந் தாண்டு கற்றுப் பேசுகின்றனர். தமிழ்,
தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்சு போலச் சிறு பிள்ளைகள் தம் பெற்றோரினின்று சமற்கிருதத்தைக்
கற்றுப் பேசமுடியாது. அதனால், அது உயிருள்ள மொழியன்று. அதே சமயத்தில் அது இறந்த மொழியுமன்று.
பிறந்ததே யிறக்கும். சமற்கிருதம் பிறந்ததும் இல்லை; இறந்ததுமில்லை; படிமையும் பாவையும்
போன்றது. இலத்தீன் போன்றதே சிறந்த மொழி.
ஆரியரின் பேரறியப்படா
முன்னோர் மொழி கிரேக்கத்தைப் பெரிதும் ஒத்தது. பாடுமேர்(Bodmer) எழுதிய
"The Loom of
Language" என்னும் மொழிநூலைப் பார்க்க.
சமற்கிருதம் தேவமொழியாயின்,
அதற்கு இனமான கிரேக்கமும் இலத்தீனமும் செருமானியமும் தேவமொழிகளாயும், ஆரியமொழிக் குடும்பத்திற்கு
அடிமூலமான தமிழ் தேவதேவமொழியாயும் இருத்தல் வேண்டும். இங்ஙனமே, பிராமணர் நிலத்தேவராயின்,
ஆரிய மொழி பேசும் ஏனையரும் நிலத்தேவராயும் தமிழர் மூலநிலத்தேவராயும் இருத்தல் வேண்டும்.
பிராமணர் பிறர்போல் மணஞ்செய்வதினாலேயே
பிள்ளை பிறக்கின்றதென்றும், கலப்பு மணத்தினாலும் பிள்ளை பிறக்கு மென்றும், இந்தியாவில்
மட்டும் பிராமணருள்ளன ரென்றும், நன்னிறமுள்ள பிற வகுப்பாரும் பூணூலணிந்துகொண்டும் பிராமணர்போற்
பேசிக்கொண்டும் பிராமணராகலா மென்றும், பிராமணர்க்கே சிறப்பான உடற்கூறொன்று மில்லை யென்றும்,
பிறப்பாற் சிறப்பில்லையென்றும், இதையே,
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்"
(குறள். 972)
என்று திருவள்ளுவர்
விதந்தோதினார் என்றும் அறிக
|