|
மதநம
மதநம்பிக்கையெல்லாம் ஏரண முறைக்கும்
அறிவியல் மெய்ப்பிற் கும் அடங்காது, அப்பாற்பட்டு, ஓரளவு குருட்டுத்தனமாகவோ குரங்குப் பிடியாகவோ
இருப்பினும், உயிர்வாழ்வையும் பொருட்படுத்தாத அளவிற்கு மக்கள் மனத்தை இறுகப் பிணிக்கும் செய்திகளுள்
தலைசிறந்தது மதமாதலால், பண்பாடு மிக்க செங்கோலரசெல்லாம், தம் குடிகட்கு மதவுரிமை யளித்தேயுள்ளனர்.
நம் இந்தியக் குடியரசு பன்னாட்டுக்
கூட்டாட்சியாதலால், மதவுரிமை யளித்திருப்பது மிகத் தக்கதே.
இனி, சிவமதமும் திருமால் மதமும்
தென்னாட்டுத் தூய தமிழ் மதங்களாதலால், இனிமேல் தமிழ்நாட்டுத் திருக்கோவில்களில், பயிற்சி
பெற்ற பல்வகைத் தமிழ் வகுப்பாரே, தமிழில் மட்டும் வழிபாடாற்றுதல் வேண்டும். இது தமிழர்
மதவுரிமையாகும்.
பிராமணர் வெளிநாட்டினின்று வந்தேறிகளின்
வழியினராதலாலும், சிறுபான்மையராதலாலும், தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருப்ப தாலும், ஆரியம்
திரவிடத்தின் திரிபாதலாலும், ஆரிய மந்திரங்களெல்லாம் தமிழர் அறியாத சிறுதெய்வக் கொலைவேள்வி
வழிபாடு பற்றியனவாதலாலும், சமற்கிருதம் வேதமொழியும் தமிழுங் கலந்த இலக்கிய மொழியாதலாலும்,
ஆரியமொழி தேவமொழியென்றும் பிராமணர் நிலத்தேவரென்றும் ஏமாற்றப்பட்டதனாலேயே, இடைக்காலத்
தமிழர் பிராமணர் ஆரிய மந்திரங்களைக் கொண்டு திருக்கோவில் வழிபாடு செய்ய இடந்தந்தனராதலாலும்,
அவ் வேமாற்று இன்னுந் தொடர இம்மியுந் தகுதியில்லை என அறிக.
பிராமணர் தமிழுக்கு உண்மையாயிருந்து
தமிழிலேயே வழிபாடு நடத்தின், அவர் பூசைத் தொழிலைத் தொடர்ந்து செய்யலாம். இதுகாறும் உயர்திணையான
மக்களின் பல்வேறு உரிமைகள் கூறப்பட்டன.
இனி, வாயில்லா ஏழை அஃறிணை உயிரினங்கள்
சிலவற்றின் உரிமையை நாம் நமதுபோற் பேண வேண்டாவா? அதையும் பேணா விடின், நாம் உயர்திணையென்று
தருக்குவது எங்ஙன் தகும்?
மாடுகளும், குதிரைகளும், ஏருழவும் நீரிறைக்கவும்
வண்டியிழுக்க வும், இரவும் பகலும் வற்புறுத்தப்பட்டு, போதிய வுணவின்றியும் முரட்டுத் தனமாக
அடியுண்டும் குத்துண்டும், புண்மேற் புண்பட்டும் எத்துணைத் துன்பப்படுகின்றன! அவை எங்ஙன் யாரிடம்
முறையிடும்? எங்ஙனம் மாநாடு கூடும்? எங்ஙனம் கூட்டணி சேரும்? எங்ஙனம் வேலை நிறுத்தஞ் செய்யும்?
உண்ணாநோன்பினாலும் வன்செயலாலும் தம் தொல்லைகளையும் துன்பங்களையும் தெரிவிக்கவோ தீர்த்துக்
கொள்ளவோ இம்மியும் அவற்றிற்கு இடமில்லையே!
|