பக்கம் எண் :

60செந்தமிழ்ச் சிறப்பு

தம

    தமிழகம், தொன்றுதொட்டுக் கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை,  சேர சோழ பாண்டியம் என்னும் முத்தமிழ் நாடாகவே யிருந்துவந்தது.

    "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு"

(தொல். 1336)

என்றார் தொல்காப்பியர்.

    "கடந்தடு தானை மூவிருங் கூடி"

(புறம். 110)

என்றார் கபிலர்.

    "பொதுமை சுட்டிய மூவ ருலகமும்"

(புறம். 337)

என்றார் பிரமனார்.

    "மும்மலையு முந்நாடும்"

என்பது திருவள்ளுவமாலை.

    "மூவர் கோவையும் மூவிளங் கோவையும்"

என்றார் ஒளவையார்.

    கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்குப்பின் பழஞ்சேர மரபு அற்றுப்போய்ச் சேரநாடும் கேரளம் என வழங்கத் தலைப்பட்டதேனும், அது 16ஆம் நூற்றாண்டு வரை கொடுந்தமிழ் நாடாக இருந்துவந்திருக்கின்றது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த துஞ்சத்து எழுத்தச்சனே, ஆரிய எழுத்து என்னும் சமற்கிருதங் கலந்த நெடுங்கணக்கைப் புகுத்தியும் வடமொழிப் பனுவல்களை மொழிபெயர்த்தும், அளவிறந்த வடசொற்களைத் தற்சம முறையில் தழுவியும், அடிப்படையிலிருந்தே வடமொழியிலக்கணத்தைக் கையாண்டும் சேரநாட்டுத் தமிழைக் கெடுத்தான். அன்றிருந்து, அது தமிழெனப்படாது கேரளம் அல்லது மலையாளம் என்னும் பெயரால் ஒரு திரிபுடைத் திரவிடமொழியாகவே வழங்கிவருகின்றது.

    மலையாளம், மூக்கொலி மிகையாலும் திசைச்சொற் றொகுதியாலும் கொச்சைத் திரிபாலும் தமிழினின்றும் வேறுபட்டிருப்பினும், இன்றும் அதிற் கலந்துள்ள ஆரியக் கூறு நீக்கப்பெறின், எஞ்சி நிற்பது சொல்லளவில் தமிழேயாம். மலையாளம் என்னும் பெயரே  தமிழ்ச்சொல்லாதல் காண்க. மலையில் அல்லது மலைநாட்டில்  வாழ்பவன் மலையாளி. மலையாளியின் மொழி மலையாளம். கேரளம் என்பது சேரலம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. சேரல் - சேரலன் - சேரலம் - கேரளம்.

மலையாளம் வடமொழி கலந்த பழந்தமிழே யாயினும்,  தமிழொடும் தமிழரொடும் நெடுங்காலம் தொடர்பின்மையாலும் பண்டை வரலாற்றை அறியாமையாலும், இடைக்காலத்தில் ஆரியர்க்கும் ஆரியத்திற்கும் உயர்வும் திரவிடருக்கும் தமிழுக்கும் இழிவும் ஏற்பட்டுவிட்டதினாலும், மலையாளியர், தமிழின் பெருமையை உணராதிருப்பதுடன், மலையாளத்தினின்று தமிழ் வந்ததென்றும் வடமொழியே மலையாளத்திற்குத் தாய