பக்கம் எண் :

மலையாளமும் தமிழும்61

என

என்றும், கூறிவருகின்றனர் தமிழருள் சில வகுப்பாரே தம்மை 'க்ஷத்திரியர்' என்றும், வடசொற் கலவாது தனித்தமிழிற் பேசுவது தாழ்வென்றும் கொண்டிருப்பதை நோக்கும்போது. மலையாளியர் கூற்றில் எள்ளளவும் வியப்பிற்கிடமின்றாம்.

    தமிழைச் சரியாய் அறிதற்குப் பிற திராவிட மொழிகளைப்பற்றிய அறிவும் இன்றியமையாததென்று கூறியுள்ளார் கால்டுவெல்  கண்காணியார். இது உயர்வுநவிற்சிபோல் தோன்றினும் உண்மைநவிற்சியே. வரலாற்றுக் காலத் தமிழகத்திற்குப் புறம்பான வடுகு, கோண்டு முதலிய வடபால் திரவிடமொழி அறிவே தமிழைச் செவ்வையாய் அறிதற்கு இன்றியமையாத தெனின், தொன்றுதொட்டுத்  தமிழகத்தின் அகத்துறுப்பானதும் அதில் மூன்றிலொரு கூறானதுமான சேரநாட்டுத் தமிழும் வடமொழிக் கலப்பானேயே அண்மையிற் பிரிந்துபோனதுமான மலையாளமொழி யறிவு, அதற்கு எத்துணை இன்றியமையாததெனச் சொல்லவும் வேண்டுமோ?

    தமிழம் என்னும் பெயர் வடநாட்டில் அல்லது வடமொழியில் திரவிடம்(தமிழம்-த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்) என்று திரிந்திருப்பது போல் தமிழ்மொழியும் பல்வேறு திரவிடமொழிகளாகத் திரிந்திருப்ப தாலும், தமிழல்லாத திரவிடமொழிகள் வழங்கும் நாடுகளில் ஆங்காங்குச் சிறப்பாக உரிய பொருள்கட்குப் புதுச்சொற்கள் தோன்றியிருப்பதாலும், பல திரவிடமொழிகள் தாய்மொழியாம் தமிழினின்று தெரிந்துகொண்ட கூறுகளுட் சில தமிழில் இறந்துபட்டமையாலும், சில திரவிடமொழிகள் தனித்தனி ஒரோவொரு கூற்றினை வளர்த்துள்ளமையாலும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்ததே முழுத்தமிழ் என்று கொள்வது இழுக்காகாது.

    திரவிட மொழிகளுள் இடம் பற்றியும் இயல்புபற்றியும் தமிழுக்கு மிக நெருக்கமானது மலையாளமாகும். அதில் வடசொற்கள் அளவிறந்து கலந்துள்ளன என்று கால்டுவெல் கண்காணியார் கூறியுள்ள நிலைமை, அதன் நூல்வழக்கைச் சார்ந்ததேயன்றி உலகவழக்கைச் சார்ந்ததன்று. இன்றும், மலையாளப் பேச்சு  வழக்கை நோக்கின், அது பெரிதும் வடசொற் கலப்பற்ற தென்பது புலனாம். இற்றைத் தமிழில் வழங்கும் சில வடசொற்கும் ஆங்கிலச் சொற்கும் நேர் தென்சொல் மலையாள மொழியில்தான்   வழங்குகின்றன.

எ-டு:    

வடசொல் தென்சொல்

மைத்துனன்

அளியன்

மத்தியானம்-மதியம்

உச்சி

வருஷம்

ஆண்டு, கொல்லம்(நகர்)

ஆரம்பம் 

துவக்கம்

உபாத்தியாயர்-வாத்தியார்

எழுத்தச்சன்

அமாவாசை

கறுத்த வாவு(காருவா)

பூரணை-பௌர்ணமி

வெளுத்த வாவு(வெள்ளுவா)