இதனையே,
"மெய்யீ றெல்லாம் புள்ளியொடு
நிலையல்." (104)
"குற்றிய லுகரமும் அற்றென
மொழிப" (105)
என மாட்டெறிந்து கூறினார்
தொல்காப்பியர். ஆயின், இதை யுணராது
குற்றியலுகரமும் மெய்யீறெனப் பிறழக் கொண்டனர்
ஆரியவழித் தமிழாசிரியர் சிலர்.
ஐ, ஒள இரண்டும் தமித்து நிற்கும்போது,
அஇ, அஉ என இருமாத்திரையே ஒலிக்கும்;
சொல்லுறுப்பாய் வரும்போதே அய், அவ் என ஒன்றரை
மாத்திரையாய்க் குறுகும்.
ஆய்தம் ககரவொலியைச் சார்ந்த
தென்பதை, அது தொன்று தொட்டு ஒலிக்கப்பட்டுவரும்
முறைமையினாலும், ஏனச்சாரியை ஏற்கும்போது
அஃகேனம் எனக் ககரத்தைப் பற்றுக்கோடாகக்
கொள்வதாலும், குறுங்கணக்கிலும் நெடுங்கணக்கிலும்
ககர மெய்க்கு முன் வைக்கப்பட்டிருப்பதாலும்,
பண்டை நெடுங் கணக் கேட்டுச் சுவடியில் க-ஃ என
வரையப்பெற்றமையாலும் அறியலாம்.
ஆய்தம் வரும் சொற்களையெல்லாம்
ஆய்ந்து பார்ப்பின், அது பெரும்பாலும் லகர ளகரத்
திரிபாகவே காணப்படுகின்றது. இதை நோக்குமிடத்து,
குமரிக்கண்டத்தில் ஓரிடத்து ஒலித்திரி பாகவோ
புணர்ச்சித் திரிபாகவோ ஆய்தம்
தோன்றியிருத்தல் வேண்டுமென்று தெரிகின்றது.
சிலர் ஆய்தத்தை வடமொழி
விசர்க்கமெனக் காட்டல் வேண்டி, அது அகரமேறியும்
ஒலிக்குமெனக் கூறி,
"அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு" (குறள். 943)
என்னும் குறளையும் எடுத்துக்காட்டுவர்.
"அளவறிந் துண்ணுக" என்னும் பாடத்தில் தளை
சரியா யிருத்தலின், அங்ஙனங் கொள்ள வேண்டிய
தின்றாம். "நயனில சொல்லினுஞ் சொல்லுக"
என்னும் குறளில் (197) சொல்க என்பது தளைக்கேற்பச்
சொல்லுக என வந்திருத்தல் காண்க.
இனி, லகர ளகர வகரம் எங்ஙனம்
ஆய்தமாகத் திரிய முடியுமென்று பலர் மயங்கலாம். பல
ஒலித்திரிபுகள் எல்லார் வாய்க்கும்
ஏற்றனவாகவும், சில ஒலித்திரிபுகள் ஓரிடத்து
ஒருசிலர் வாய்க்கே இசைந்தனவாகவும்,
அமைந்துள்ளன. இதனாற் பின்னவை பிறர் மயங்குதற்கு
இடமாகின்றன.
|