பக்கம் எண் :

இயனிலைப் படலம்127

விடத்தே நன்றாய் வலித்தும், தனித்துவரின், சொன்முதலில் ஒலி விழுத்தத்தினால்(accent) சற்றே வலித்தும், சொல்லிடையிலுங் கடையிலும் மெல்லின மெய்யை அடுப்பினும் அடுக்காவிடினும் பொலிந்தும் ஒலிக்கும். இவ்வியல்பை நெல்லை மாவட்டத்து நாட்டுப்புற மக்கள் பேச்சில்தான் நன்றாய்க் காண முடியும்.

ற்ற, ன்ற என்னும் இணைமெய்யொலிகளை, முறையே, tt, nd என்னும் ஆங்கில மெய்யிணை போலப் பிளவின்றி யொலிப்பதே தமிழ்மரபாம். அங்ஙன மன்றிப் பிராமணரைப் பின்பற்றி, ttr, ntr என விதிரொலியுடன் (trill) பிளவுபடப் பலுக்குவது வழுவாம்.

பிரான்மேயர் (Frohnmeyer) எழுதிய ‘படிமுறை மலையாள இலக்கணம்‘ (A Progressive Grammer of the Malayalam Language) என்னும் நூலின் 9ஆம் பக்கத்தில் கூறியிருப்பதைக் கவனிக்க. பண்டைச் சேரநாட்டுத் தமிழே ஆரியத்தொடு சேர்ந்து மலையாள மாகத் திரிந்திருப்பதால், மலையாள றகரத்திற்குச் சொன்னது தமிழ் றகரத்திற்கும் ஒக்கும்.

றகரம் தனித்தும் இரட்டியும் னகரமெய்யடுத்தும் வரும் மூவேறு நிலைமைபற்றி, மூவேறு ஒலிகளை அடையும்.

(1) ற

இது வலிய அல்லது முரட்டு ரகரம். இதற்கொப்பானது ஆங்கிலத்தி லில்லை.

(2) ற்ற

இது sit என்பதிலுமுள்ள t போல், அல்லது sitting என்பதிலுள்ள tt போல் ஒலிப்பது.

(3) ன்ற

இது send என்பதிலுள்ள nd போல் ஒலிப்பது.

ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் மெலிவலி யிணைகளே தமிழிலுண்டு; ங்க்க (nk), ஞ்ச்ச (nc), ண்ட்ட (nt), ந்த்த (nth), ம்ப்ப (mp), ன்ற்ற (nt), என்னும் வன்மெலிவலி யிணைகள் தமிழில் நிகழ இம்மியும் இடமில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி, தமிழி யல்பை அறியாது, ஆங்கில வரிபெயர்ப்பில் (transliteration) கொடு என்பதைக் கொட்டு என்றும், பாம்பு என்பதைப் பாம்ப்பு என்றும் ஒலிக்குமாறு தவறாகக் குறித்திருப்பதினால், அதைப் பின்பற்றிய பரோ-எமெனோ திரவிட ஒப்பியல் அகரமுதலியும் அங்ஙனம் வழுப்படக் குறித்துள்ளது.