(6) வலித்துரைத்தல்
இருமொழிகள் குறுகிய
காலத்தில் அடுத்து வழங்கினும், ஒன்றினின்று இன்னொன்று ஒரு சில சொற்களையேனும் கொள்ளாதிராது.
வடமொழி தென்மொழியொடு தொடர்புகொண்டு மூவாயிரம் ஆண்டிற்கு மேலாயினும், அதிற் கலந்துள்ள
ஆயிரக்கணக்கான தென் சொற்களுள் ஒன்றையேனும் தென் சொல்லென ஒப்புக் கொள்ளாது வட சொல்லேயென
வலிப்பது, இன்றும் வட மொழியாளர் இயல்பாயிருந்து வருகின்றது. வட மொழியி லுள்ள தென்
சொற்கள் ஐந்திலிரண்டு பகுதியாகும்.
(7) தேவமொழியெனல்
வேத ஆரியர், பழங்குடி
மக்களான பண்டைத் தமிழரின் பேதைமையையும் மதப்பித்தையும் அளவிறந்து பயன்படுத்தி, தம்மை நிலத்தேவர்
(பூசுரர்) என்றும், தம் முன்னோர் மொழியான வேத ஆரியத்தையும் அதன் வழிப்பட்ட சமற்கிருதத்தையும்
தேவமொழியென்றும் சொல்லித் தமிழர் அதை முற்றும் நம்புமாறு செய்துவிட்டதனால், தமிழில் அளவிறந்த
வடசொற்கள் வேண்டாது கலக்கவும், அதனால் அது தன் வளங் குன்றித் தூய்மையிழக்கவும், வழிபாட்டிற்குத்
தகாததென்று தள்ளப்படவும், இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தமிழர் தம்மைத் தாழ்த்திக்
கொள்ளவும், நேர்ந்ததென அறிக.