பக்கம் எண் :

தமிழன் பிறந்தக தீர்மானிப்புக் கருத்தரங்கு73

ஏனென்றால் அவர்கள் ஒரு சிறு கூட்டத்தாராக இருந்ததாலும், அக்கால் வடக்கே இருந்த மக்கள் பேரளவினராக இருந்ததாலும், கடலில் காயம் கலந்தது போல் அம்மொழி ஒன்றுமில்லாமற் போய்விட்டது. அந்த வழக்கற்றுப் போன ஆரிய மொழியுடன், அக்கால் வட இந்தியாவில் வழங்கி வந்த வட திராவிட மொழியான பிராகிருதம் கலந்துதான் வேத மொழி (Vedic Language) ஏற்பட்டது. அந்த மொழியும் பேச்சு மொழியாக இல்லாமல் எழுத்து மொழியாக மட்டுமே இருந்தது. பிராகிருதத்துடன் அந்த ஆரியமொழி கலந்ததால்தான், மேனாட்டு ஆரிய மொழிகளில் உள்ள எகர ஒகரம் இதில் இல்லாமற் போயின. இந்தியிலும் எகர ஒகரம் இல்லை. ஏ, ஓ நெடில்கள்தாம் இருக்கின்றன. அப்படியே வேதமொழியிலும் ஏ, ஓ நெடில்கள்தாம் இருக்கின்றன. மேலும் வேதங்களில் நிரம்பவும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அதற்குப் பின்னர் ஆரியர்கள் தங்கள் நிலையை மேம்படுத்துவதற் காகவும், வலுப்படுத்துவதற்காகவும் ஓர் இலக்கிய மொழி வேண்டுமென்று தென்னாடு வந்து பழந்தமிழர்களுடன் பழகி அவர்கள் மொழியிலுள்ள சொற்களையெல்லாம் தங்கள் மொழியில் கலந்து கொண்டார்கள். அந்த வேதமொழியும் தமிழ் மொழியும் கலந்து செய்த ஓர் இலக்கியமொழி (Literary Language)தான் இந்தச் சமசுக்கிருதம் என்று சொல்லப் பெறும் மொழி. சம்சுக்கிருத்-சம் என்றால் கூட என்று பொருள்; வேறொன்று மில்லை. கூட- கலந்து செய்தது என்பது. ப்ராகிருத் என்றால் முந்திச் செய்யப்பட்டது என்று பொருள். இந்த வரலாற்றை இப்பொழுது தலை கீழாக மாற்றிச் சொல்கிறார்கள்.

இப்பொழுது வட்டம் என்று தமிழில் இருந்தால் அது வட்ட என்று பிராகிருதத்தில் இருக்கும் சமசுக்கிருத்திலே விருத்த என்று திரியும். அது இன்னும் Verto என்றிருக்கும் இலத்தீனிலே. இப்படிப் பார்த்தால் தமிழின் முன்மை நன்கு தெரியும். சமசுக்கிருதமானது ஓர் அரைச் செயற்கை இலக்கியமொழி. (Semi artificial Literary dialect) அதை இப்பொழுது, என்றோ பெருமளவில் வழங்கி வந்தமொழி போலவும், உயிர்மொழி போலவும் சொல்லிக் கொள்வார்கள். அதோடு, அந்த வேத மொழியைக்கூட Vedic Sanscrit என்று சொல்லுகிறார்கள். அது (Pro-chronism) முற்காலப்படுத்தம் என்னும் குற்றத்திற்கு-வழுவுக்கு இடந்தருவது. அந்தக் காலத்தில் அம்மொழி இல்லவே இல்லை. சமசுக் கிருதம் ஆரிய மொழிகளுக்கெல்லாம் மிக முந்தியது என்று வேறு தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இஃதெல்லாம் "என் பாட்டன் திருமணத்திற்கு நான்தான் பாட்டுக் கட்டினேன்" என்று சொல்வது போலாகும். (நெடுஞ்சிரிப்பு). ஆகவே, காலமுறைப்படி நாம் ஆராய்ந்து பார்த்தால் சமசுக்கிருதம் இறந்தது மில்லை; பிறந்தது மில்லை. சிலர் அதை இறந்தமொழி என்று சொல்லுகின்றார்கள். அவர்களோ அஃது இறக்க வில்லை; இன்னும் உயிரோடு இருக்கின்றது என்று சொல்லி வருகிறார்கள். அது பிறந்தாலன்றோ இறப்பதற்கு? மொழிக்கு உயிர் என்று