பக்கம் எண் :

72பாவாணர் உரைகள்

படிக்கவோ பாடஞ் சொல்லவோ விடலாம். இந்த நிலை ஏற்படுகின்ற வரையில், ஒருவேளை உண்மையான வரலாற்றைத் தெரிவிக்கும் நூல்கள் இன்னும் வெளிவரவில்லை யெனில், மாணவர்கள் பல மெய்யான வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பெடுத்துக் கொண்டாகிலும் கற்கலாம்; கற்பிக்கலாமே!

இது நாள் வரையில் நாம் எத்தனையோ முறைகளில் உண்மைகளை எடுத்துச் சொன்னோம் எழுதியும் வருகிறோம். இனிமேல் நாம் ஒன்று சேரவேண்டும். அப்பொழுது உண்மையில் இதற்கென ஒரு போராட்டமே தொடங்க வேண்டியிருக்கும். அதற்கு ஒரு கால் கோளாகவே இக் கருத்தரங்கு கூட்டப் பெற்றது என்று எண்ணிக் கொள்ளுங்கள். இனி அடுத்த ஆண்டிலே ஒரு மாநாடு நடக்கும். அது சமசுக்கிருத எதிர்ப்பு மாநாடு. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆட்சி மொழிகள் மூன்றாகத்தான் இருக்க முடியும். ஆங்கிலம், தமிழ், இந்தி. ஆங்கிலம் எல்லாருக்கும் பொது. தமிழ் தமிழ்நாட்டிற்குரியது. இந்தி இந்தி வழங்குகிற நாடுகளுக்கும் அதை விரும்புகிற நாடுகளுக்கும் பொதுவாக இருக்கட்டும். இந்த மூன்று மொழிகள்தாம் இருக்க வேண்டும். இதுதான் நடுநிலையான முடிபு. ஆங்கிலம் இருந்தே தீர வேண்டும்; இந்தியா முழுவதற்கும் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலே இந்தி இங்கு இருக்கவே கூடாது. தமிழும் ஆங்கில முந்தாம் இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள தொடர் வண்டி நிலையப் பலகை களிலோ, அரசியல் அலுவலகங்களிலுள்ள பெயர்ப் பலகைகளிலோ இந்தி எழுத்து இருக்கவே கூடாது. இருப்பதாக விருந்தால் இந்திய நாடுகளில் (மற்ற மாநிலங்களில்) உள்ள அலுவலகங்களில் உள்ள பலகைகளிலும் தமிழ் எழுத்தும் இருக்க வேண்டும். (நீண்ட கையொலி). அங்குத் தமிழ் இருக்கக்கூடாதென்றால் இங்கும் இந்தி இருக்கக்கூடாது. அந்த நிலைமை வந்தாலொழிய நமக்கு விடிவில்லை. எவ்வளவொ மேலும் மேலும் சொல்லிக்கொண்டே வருகிறோம். மேலும் மேலும் இந்த இந்தியும் நெருங்கிக்கொண்டே வருகிறது. இப்பொழுது யாரும் அதைத் தடுப்பதாயில்லை. அவர்கள் தங்கள் நிலைகளைக் காத்துக் கொள்வதே பெரிதும் இடர்ப்பாடாயிருக்கிறது. எனவே நாம்தாம் எல்லா நிலைகளிலும் விழிப்பாயிருக்க வேண்டும்.

இனி, அடுத்து நடைபெறவிருக்கும் சமசுக்கிருத மாநாடுபற்றியும் கொஞ்சம் சொல்லியாக வேண்டியிருக்கின்றது. நமக்கு சமசுக்கிருதம் தேவையே இல்லை. இந்தச் சமசுக்கிருதத்தைப்பற்றித் தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. தமிழ் வடக்கே போய்த் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறினது. அந்த ஆரியத்திலே ஒரு பகுதியினர் - கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிய ஒரு தொகுதி ஆரியர்கள்தாம் - இந்தியாவிற்கு வந்தார்கள்.அவர்கள் இந்தியாவிற்கு வந்தவுடன் அவர்கள் பேசிய மொழி வழக்கற்றுப் போய்விட்டது.