பக்கம் எண் :

82மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

'எது மூலம்? எது திரிபு?' என்பது, சொல்லமைப்பை நோக்கினால் தெரிய
வரும்.

3. இலக்கியச் சொற்பொருள் வரிசையே இயற்கைச்
  சொற்பொருள் வரிசையெனல்

     ஒரு சொல்லின் பல வடிவங்களும் பொருள்களும் தோன்றிய
காலவொழுங்கை, அவை முதன்முதலாகத் தோன்றியபொழுதே, அறிய
முடியும். இலக்கியத்திற் புதிதாகத் தோன்றியவை தவிரப் பிறவெல்லாம்,
பழைய மொழிநிலையில் தோன்றிய வரிசைப்படியன்றி, அவ்வவ் விடத்தின்
தேவைக்கேற்றவாறே, முன்னது பின்னும் பின்னது முன்னுமாக ஆளப்பெறும்.
ஆதலால், இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சொல்லின்
வடிவையோ பொருளையோ முன்னது பின்னதென்று துணியமுடியாது.
ஆயின், இயற்கையையும் உளநூலையும் தழுவி ஏரண முறைப்படி,
சொற்பொருள் வரிசையொழுங்கைப் பெரும்பாலும் உய்த்துணரலாம்.

     பள்ளி என்னுஞ் சொல்லிற்குப் படுக்கை, தூக்கம், படுக்கையறை,
அறை, வீடு, இடம், விலங்கு துயிலிடம், சாலை, அறச்சாலை, மடம், பள்ளிக்
கூடம், தவப்பள்ளி, அரண்மனை, கோவில், சமண புத்தர் தொழுகைமனை,
பணிக்களம், அரசன், துறவி ஆகியோர் கல்லறை, இடைச்சேரி, சிற்றூர்,
நகரம் முதலிய பல பொருள்கள் உள. அவற்றுள் இடம் என்பது வீடு
என்பதன் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். ஆயின், இற்றைத்
தமிழ்நூல்களுள் முதலதாகிய தொல்காப்பியத்தில்,

     "சொல்லிய பள்ளி நிலையின வாயினும்"(எழுத்து.18)

என்று, பள்ளி என்னும் சொல் இடம் என்னும் வழிப்பொருளில்
ஆளப்பட்டிருப்பதால், அதையே முதற்பொருளாகச் சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்துள்ளது. இங்ஙனமே, மேலைமொழி
நூலாரும், இலக்கியத்தில் முந்தியாளப்பட்ட வடிவும் பொருளும் முந்தியவை
யென்றும், பிந்தியாளப்பட்ட வடிவும் பொருளும் பிந்தியவையென்றும்,
கொண்டிருக்கின்றனர்.

     பள்ளி என்னும் சொல்லின் முதனிலை பள்ளத்தை அல்லது தாழ்
மட்டத்தைக் குறிப்பதால், படுக்கை என்பதே அதன் முதற் பொருளாகும்.
நிற்கையிலும் இருக்கையும், இருக்கையினும் படுக்கையும் அதனாற் படுக்கும்
இடம் அல்லது விரிப்பும் தாழ்மட்டமாயிருத்தல் காண்க. பள்ளி கொண்டான்
பள்ளியெழுச்சி என்னும் வழக்குகளையும் நோக்குக. பள்-படு-படுக்கை, படை,
பாடி. பாடை, பாடு. பாட்டரம் = தட்டையரம். படை என்பது முதலில்
அடிப்படையையே குறித்தது.

     ஆரியமொழிகள் திரிமொழிகளாதலால், அவற்றின் சொற் பொருள்கள்
அவற்றிலேயே தோன்றியன வல்ல.