பக்கம் எண் :

சேயும் சேய்மையும் 83

4. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகள் எனல்

    
"எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" என்பது தொல் காப்பியம்
(பெயரியல், 1). இங்ஙனஞ் சொல்வதும் சொல்லக் கூடியதும் தமிழ் ஒன்றே.
ஏனெனின், பெரும்பாற் சொற்களை இன்னும் இயல் வடிவிற் கொண்டுள்ளது
அஃதொன்றே. ஏனைமொழிச் சொற்கள் பெரும்பாலும் திரிவடிவிலும்
சிதைவடிவிலுமிருப்பதால், அவற்றின் வேர்ப்பொருளைக் காணல் இயலாது.

தமிழ்பிறமொழிபொருள்
மாறு - மாற்றம்மாட்ட (தெலுங்கு)சொல்
இடைகழிதேஹலீ (சமற்கிருதம்)வீட்டின் நடை
(இடைகழி-டேகழி-டேழி-ரேழி)(கொச்சைத் திரிபு) டேகழி என்பதன் திரிபே தேஹலீ 
இஞ்சிவேர் (இஞ்சு-இஞ்சி)ஜிஞ்சர் (ஆங்கிலம்)இஞ்சி
பசு-பை-பைது-பைதல்பைதொஸ் (கிரேக்கம்)பையன்
வள்-வர்-வார்-வாரணம்-வாரணமாரினஸ் (இலத்தீன்)கடற்குரிய

     தமிழிலும் பல சொற்களைக் கண்ட அல்லது கேட்டமட்டில் அவற்றின்
வேர்ப்பொருளைக் காணமுடியாது. சிலவற்றில் அது விளங்கித் தோன்றும்;
சிலவற்றில் மறைந்து நிற்கும். மறைந்து நிற்பவற்றை ஆய்ந்தே காணல்
வேண்டும். அதனால், கமொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றாக
என்றார் தொல்காப்பியர். (உரி.96).

     எ-கா :சுள்-சுடு-சுடல்-சுடலை (விழிப்பத் தோன்றுவது)

     புல்-புள்-புழல்-புடல்-புடலை (விழிப்பத் தோன்றாதது)

     மேலை மொழிநூலார் இயன்மொழியாகிய தமிழை அடிப்படை யாகக்
கொள்ளாது திரிமொழியாகிய சமற்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு
ஆய்ந்ததனாலேயே, வேர்ப்பொருள் காணாது குன்று முட்டிய குருடர் போல்
இடர்ப்பட்டு, எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்று முடிபு
செய்தனர்.

5. இந்திய நாகரிகம் ஆரியர் கண்டது எனல்

    
தமிழ் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராயாது,
தமிழர் நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்தவரென்றும், கலவை
யினத்தாரென்றும், வேத ஆரியரால் நாகரிகப்படுத்தப்பட்டவ ரென்றும்,
குருட்டுத்தனமாகவும், குரங்குப் பிடியாகவும் கொண்டுள்ளனர். இதற்கு
ஆராய்ச்சியின்மை மட்டுமன்றி, இனவுணர்ச்சியும் கரணியமாகும்.

     குமரிநாடு முழுகிப் போனதும், முதலிரு கழக நூல்களும்
இறந்துபட்டதும், மதத்துறையில் தமிழும் குமுகாயத்துறையில் தமிழரும்
தாழ்த்தப்பட்டிருப்பதும், இவற்றிற்கு மாறாக, இந்திய நாகரிக இலக்கியம்