பக்கம் எண் :

ஆலமரப் பெயர் மூலம் 87

2. சேய்மை

     உகரச்சுட்டு உயர்ச்சி குறித்தலை, உக்கம்(தலை), உகள்(குதி), உச்சி-
உச்சம், உத்தரம்(மேல்விட்டம், உயரமான வடக்கு), உத்தி (தலையணி),
உப்பு (பொங்கியெழு), உம்பு-உம்பர்-உம்பரம், உயர், உவண்-உவணம்-
உவணை (மேலிடம், மேலுலகம்), உவர்(உப்பு), உறி, உன்னு(குதித்தெழு)
முதலிய சொற்களால் அறியலாம்.

     உகரம் இகரமாகத் திரியும்.

     எ-கா: உவர் - இவர். இவர்தல் = உயர்தல், ஏறுதல்.

     "இவர்பரித் தேரினர்" (சிலப். 5 : 160)

     உகரம் எகரமாகவும் ஊகாரம் ஏகாரமாகவும் திரியும்.

     எ-கா: உகள் - எகிர்.

     ஊர் - ஏர். ஊர்தல் = ஏறுதல், ஏறிச்செல்லுதல்.

     ஊர் - ஊர்தி = ஏறிச்செல்லும் விலங்கு அல்லது அணிகம்(vehicle).

     ஊர் - ஊர்த்தம் = மேனோக்கல், உயர்தல், ஊர்த்தம் - வ.
           ஊர்த்துவம் (urdha).

     ஏர்தல் = எழுதல்.

     "உலக முவப்ப வலனேர்பு திரிதரு" (திருமுருகு. 1)

     இதனால் எகர ஏகாரங்களும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்தும்.

     எஃகு, எக்கு, எகிர், எட்டு - எட்டம், எடு, எண், எத்து, எம்பு, எவ்வு,
எழு - எழும்பு, எற்று முதலிய சொற்களில் எகரமும்; ஏங்கு, ஏண் - ஏணி,
ஏணை, ஏத்து, ஏத்தாப்பு, ஏந்து, ஏப்பம், ஏர், ஏல், ஏவு, ஏறு - ஏற்றை
முதலிய சொற்களில் ஏகாரமும் உயர்ச்சிக் கருத்தை உணர்த்துதல் காண்க.

     ஏகாரவுயிர் தன்னளவில் ஓரெழுத்துச் சொல்லாய் நின்றும் உயர்ச்சிக்
கருத்தை யுணர்த்தும்.

     ஏ = 1. மேனோக்குகை.

     "கார்நினைந் தேத்தரு மயிற்குழாம்" (சீவக. 87)

     2. கழுத்தை நிமிர்த்துதல், தலையெடுப்பு.

     ஏக்கழுத்தம் என்பது உலக வழக்கு.

     "காதிரண்டு மில்லாதான் ஏக்கழுத்தஞ் செய்தலும்" (சிறுபஞ். 5)

     3. இறுமாப்பு. "ஏக்கழுத்த நாணால்" (பரிபா. 7 : 55).

     4. அடுக்கு. "ஏபெற் றாகும்." (தொல். 304). "ஏகல் லடுக்கம்" (நற்.116).

     5. உயர்வு, பெருக்கம், மிகுதி.

     உயிர்முதற் சொற்கள் ஏதேனுமொரு மெய்யை முன்மிகையாகப்
பெறுவது இயல்பு.

     எ-கா : இளை-சிளை. சிளைத்தல் = சோர்தல், இளைத்தல்.