எ-கா: ஆள் - ஆண், எள் - எண், கோள் - கோண், பெள் - பெண், வேள் - வேண்; களவாளி - களவாணி, வளரி - வணரி; சுருளை - சுருணை, திரளை - திரணை. ளகரமெய்யீறு பல சொற்களில் யகரமெய்யீறாகத் திரிகின்றது. எ-கா:அள் - (அய்) - அயல், இள் - எள் - எய், கள் - (கய்) - கை(கய - கச), கொள் - கொய், கோள் - கோய், சாள் - சாய், தொள் -தொய், நெள் - நெய், நொள் - நொய், பொள் - பொய், மாள் - மாய், வள் - (வய்) - வை, (கூர்மை), வெள் - வெய். இங்ஙனம், சேய்மையுணர்த்தும் சேய் என்னும் சொல்லும் சேள் என்னும் இறந்துபட்ட சொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும். ஏ - ஏள் - ஏண், ஏள் - சேள் - சேய். பழம்பாண்டி நாடாகிய, குமரிக்கண்ட முழுக்காலும், முதலிரு கழக இலக்கிய அழிவாலும், பல்லாயிரம் சொற்கள் இறந்துபட்டொழிந்தன. அவற்றுள் ஒன்று, சேண் சேய் என்னும் இரண்டையும் இணைத்துக் கொண்டிருந்த சேள் என்னும் இடைநிலைச் சொல்லென உய்த்துணர்ந்து கொள்க. - "செந்தமிழ்ச் செல்வி" மே 1967 |