பக்கம் எண் :

10மறுப்புரை மாண்பு

-10-
 

2. குரல் சட்சமே; மத்திமமன்று 

 

    13. சட்சம் ஏனைய ஆறு சுரங்கட்கும் அடிப்படையாதலால் அதுவே வண்ணப்பட்டடை என்கிறார் நம் நண்பர். வண்ணம் அல்லது பண் சுரத்தாலமைவதெனினும், அச் சுரங்கள் ஆரோசை  (ஆரோகணம்) யாகவும் அமரோசை(அவரோகணம்) யாகவும்  நேராகவோ வளைந்தோ இயங்கிக் கலந்தொலித் தன்றித் தனித்தனி யிசைத்து வண்ணமாகாமையாலும், அங்ஙனங் கலத்தற்குக் குறைந்தது இரு சுரங்கள் வேண்டுமாதலானும், சச, சரி, சக, சம, சப, சத, சநி என இவ்விரு சுரங்களா யிணைக்கும்போது சப என்ற இணையே சிறந்தொலித்தலானும், ''தாரத்துட் டோன்றும் உழை'' என்னும் நூற்பாவால் ச ப முறையிலேயே நரப்பிசை யமைத்தார்கள் முன்னோர் என்று தெரிதலானும், வண்ணத்திற்கு அடிப்படையாகிய இணையெனப்படும் 7ஆம் நரம்பாகிய இளியையே(பஞ்சமம்) வண்ணப் பட்டடை யென்றழைத்தனர் முன்னோர் என அறிக. ஐ ஒள என்னும் புணரொலிகளில் அகரக்கூறு மிருந்தாலும் அதைப்  பொதுவென்று தள்ளி விட்டுச் சிறப்பான இகர வுகரங்களையே முறையே அவற்றுக் கினக்குறிலாகக் கொண்டாற்போல, சப என்னும் இணையில் பொதுவான 'ச'வைத் தள்ளிவிட்டுச் சிறப்பான 'ப' வை வண்ணப்பட்டடை என்றனர். மேலும், சட்சம் மற்ற ஆறு சுரங்கட்கும் அடிப்படையாதல்பற்றிப் பட்டடையெனப்படின், சுரப்பட்டடையென்று கூறப்படுவதன்றி வண்ணப் பட்டடை என்று எங்ஙனங் கூறப்படும்?

    14. நம் நண்பர் குரல் என்னும் சொல் வந்தவிடமெல்லாம் அஃது   ஏழிசை முதலைக் குறியாதென்றும், ''குரல் குரலாகத் தற்கிழமை  திரிந்தபின்'' என்னும் அடியில் முந்தின குரல் ஓரிசையையும் பிந்தின குரல் தொடங்குமிசையையுங் குறிக்கு மென்றும் என்னை மறுப்பதுபோல எண்ணிக்கொண்டே தம்மையறியாமல் என்னைத் தாங்கியுரைத்திருப்பது பற்றி மிக மகிழ்வதுடன் அவருக்கு நன்றியும் கூறுகின்றேன். குரல் என்னும் சொல் முதலாவது ஏழிசையில் தொடங்கு மிசையாகிய சட்சத்தைக் குறிக்கும்; இரண்டாவது எந்த இசையையும் குரலாக அல்லது தொடங்கு மிசையாகக் கொள்ளும்போது அதைக் குறிக்கும். எந்த இசையில் தொடங்கினாலும் அதுவே குரல் என்றும், குரல் என்பது முதலிசையாகிய சட்சத்தின் பெயராயிருத்தலாலேயே அது தொடங்குமிசையைக் குறித்ததென்றும் நம் நண்பர் அறியாது போயினர். 'குரல் குரலாக','துத்தம் குரலாக', 'கைக்கிளை குரலாக', 'உழை குரலாக', 'இளி குரலாக', 'விளரி குரலாக','தாரம் குரலாக' என்று நூல்களிற் கூறியிருப்பதெல்லாம், எமது கொள்கைக்கே சான்றா மென்பதை இனியேனும் நம் நண்பர் அறிவாராக. ஆர்மோனியம் என்னும் சுரப்பெட்டியில் ஒவ்வொரு கட்டையாய் ஏற்றியேற்றிக் கேள்வி (சுருதி)யாக வைத்துக்கொண்டு போனால், ஒவ்வொரு கட்டைக்குரிய சுரமும், தான் கேள்வியாகும்போது குரல்(சட்சம்)  அல்லது தொடங்குமிசையாம் என்றும், இங்ஙனம் கேள்வியேற்றுவது பண்ணுப் பெயர்த்தல், உயர்த்திப் பாட