பக்கம் எண் :

''பாணர் கைவழி''மதிப்புரை(மறுப்பு) 119

-119-

 8. 'பாணர் கைவழி'மதிப்புரை(மறுப்பு)

திருநீலகண்ட யாழ்ப்பாணர், ''யாழ்முரிப் பண்ணை''த் தம் யாழி லிட்டுக் காட்ட முடியாமைக்கு, முதலாவது, அவரது அளவிறந்த சிவபத்தியே காரணம். தருமபுரத்திலுள்ள அவருடைய உறவினர், அவா திருஞானசம்பந்தரின் திருப்பதிக இசையை யாழ்ப்படுத்தி வந்த திறனைப் புகழ்ந்தபோது, அவர் அதற்கு மிக வருந்தி, யாழிலிட்டுக் காட்ட முடியாத வாறு திருப்பதிகம் பாடும்படி தாமே திருஞானசம்பந்தரை வேண்டினார். இதனால், யாழிலிட்டுக் காட்ட முடியாத பெருமை, திருப்பதிக இசைக் கிருத்தல் வேண்டுமென்று அவர் பேரவாக் கொண்டமை புலனாகும். இத்தகைப் பத்தி நோக்குடையவர் எங்ஙனம் தம் திறமையை அன்று காட்டியிருக்க முடியும்? அவர் காட்ட முயன்றிருப்பினும், அவரது அச்ச மனப்பான்மை எங்ஙனம் இடந்தந்திருக்கும்?

    இரண்டாவது, யாழில் மட்டுமன்றி வேறெவர் மிடற்றிலும் இசைக்க முடியாதவாறு, இறைவனருளால் இறும்பூதுச் செயலாக யாழ்முரிப் பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினாரென்று, சேக்கிழார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். வேறெவர் மிடற்றிற்கும் இயலாத இசை யாழுக்கு மட்டும் எங்ஙனம்  இயன்றிருக்கும்? இதனால் யாழ்முரிப் பண்ணைப் பாணர் யாழிலிட்டுக் காட்டமுடியாமை அவர் யாழ் வில்யா ழொத்தது என்னும் போலி யூகிப்பிற் கேதுவாகாமை பெறப்படும்.

    மேற்காட்டிய காரணங்களின் உண்மையைப் படிப்போர் அறிதற்கு, அந் நிகழ்ச்சியைக் கூறும் பெரியபுராணச் செய்யுள்களை ஈண்டுக் காட்டுகின்றேன்:

    'தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பிடமாம்
     அதனாற் சார
    வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண் டடிவணங்கி
     வாழ்த்தக் கண்டு
    பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார் பிள்ளையார்
     அருளிச் செய்த
    அருமையுடைப் பதிகந்தாம் யாழினாற் பயிற்றும்பே
     றருளிச் செய்தார்.'

    'கிளைஞருமற் றதுகேட்டுக் கெழுவுதிருப் பதிகத்திற்
     கிளர்ந்த ஓசை
    அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்று மதனாலே
     அகில மெல்லாம்
    வளரஇசை நிகழ்வதென விளம்புதலும் வளம்புகலி
     மன்னர் பாதம்
    உளம்நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப் பெரும்பாணர்
     உணர்த்து கின்றார்.'