|
5. 'யாழும் வீணையும் வெவ்வேறு
கருவிகள்'
ஒரு நரம்புள்ள சுரையாழ் முதல் ஆயிரம்
நரம்புள்ள ஆதியாழ் வரை எல்லா நரப்புக் கருவிகட்கும் யாழ் என்பது பொதுப் பெயராகும்.
எவ்வெவ் வடிவிலிருப்பினும், எவ்வெவ் அமைப்பைக் கொண்டதாயினும், எவ்வெம் முறையில்
இசைக்கப்படினும், எவ்வெந் நாட்டிற்குரியதாயினும், நரம்பு அல்லது கம்பிகொண்ட
இசைக்கருவிகளெல்லாம் தமிழில் யாழ் என்றே பெயர் பெறுதற்குரியன. கின்னரி அல்லது
சீறியாழ்(Fiddle),் கித்தார்,
சுரமண்டலம், மண்டொலின், பேஞ்சோ, புல்புல்தாரா, சுரகெத், சித்தார், கச்சுவா,
தாவூஸ், தில்ரூபா, எஸ்ராஜ், சாரிந்தா (சாரங்கி), வில்லடி, சுரைவீணை, அகப்பைக்
கின்னரி, வில்யாழ், தம்புரா(கேள்வியாழ்), வீணை முதலிய எல்லா நரப்புக் கருவிகளும்
பொதுப்பட யாழ் என்றே அழைக்கப் பெறுவன. ஆகவே யாழ் என்பது ஒரு தனிப்பட்ட
கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி
என்னும் நால்வகைக் கருவியுள் நரப்புக்கருவியை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பொதுப்
பெயராகும். இப் பாகுபாட்டின்படி இற்றை வீணையும் ஒருவகை யாழாயிருக்க, அதை
மட்டும் எங்ஙனம் வேறு பிரித்துக் கூற முடியும்?
யாழும் வீணையும் வெவ்வேறு
கருவியாயிருப்பின், நாரதயாழ் நாரதவீணை எனச் சிலப்பதிகாரத்தும், மகரயாழ் மகரவீணை
எனச் சிந்தாமணியிலும், ஒரே கருவி ஏன் இரு பெயராலும் அழைக்கப்பெறல் வேண்டும்? ஆதி
(பெரு), மகர, சகோட, செங்கோட்டு, முண்டக, சிறு முதலிய அடையடுத்தாலன்றி, யாழ்
என்னும் பெயர் ஒரு சிறப்புவகை நரப்புக் கருவியைக் குறிக்காது. ஆயினும்,
சுருக்கம்பற்றி, துப்பாக்கியிற் பலவகை யிருப்பினும் அவற்றுட் சிறந்ததும்
துப்பாக்கியென்றே அழைக்கப்பெறுதல் போல, யாழுட் பலவகையிருப்பினும் அவற்றுட்
சிறந்ததும் யாழ் என்றே அழைக்கப்பெறும்.
நரப்புக்கருவி வில்நாணொலியிலிருந்து
கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிதலால், வில்யாழே முதன்முதல் தோன்றிய
யாழ்வகையாக இருத்தல்வேண்டும். அதன்பின், பத்தர் (குடம்) உள்ள
வில்யாழும், பத்தரும் கோடும் (தண்டியும்) உள்ள கோட்டியாழும், பத்தரும் கோடும்
திவவுமுள்ள திவவியாழும், முறையே தோன்றியிருத்தல் வேண்டும். தலைச்சங்க காலத்திலேயே
தமிழ் முத்தமிழாய் வழங்கியதால், கடைச்சங்க காலத்துச் சிறந்த யாழ்வகைகளாகக்
கொள்ளப்பட்ட பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை
திவவியாழாகவே இருந் திருத்தல் வேண்டும். அவை முறையே யாழும் ஒன்றினொன்று ஏதேனு மொரு
வகையில் சிறந்ததாயு மிருந்திருத்தல் வேண்டும். அவற்றுள், செங் கோட்டியாழ்
கருவியமைப்பில் இற்றை வீணையை ஒத்ததாகும். நரம்பிற்குப் பதிலாய்க் கம்பியும்
வார்த்திவவிற்குப் பதிலாய் வெண்கல மெட்டும் தோற் போர்வைக்குப் பதிலாய்
மரப்பலகையும் வறுவாய்க்குப் பதிலாய் நுண்
|