|
துளைத் தகடும், கொண்டிருத்தலே இற்றை
வீணையின் வேறுபாடாம். குட வடிவிற் சிறிது மாறுதல், கோல் எனப்படும் மெட்டுத்
தொகையிற் கூடுதல், ஆகியவற்றையும் வேறுபாடாகச் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம்
காலவளர்ச்சியில் வசதிக்கேற்ப ஏற்பட்டவை. ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட
செங்கோட்டியாழ் இன்று இத்துணை வேறுபட்டிருப்பது வியப்பன்று.
''பேரியாழ் பின்னு மகரஞ்
சகோடமுடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் -
தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற்
கோமானே பின்னு முளவே பிற''
என்பதனால், கடைச்சங்க
காலத்தில் பலவகை யாழ்கள் இருந்தன என்பதும், அவற்றுள் நான்கு சிறந்தன என்பதும்,
அவற்றுள்ளும் செங்கோட்டியாழ் தலைசிறந்தது என்பதும் அறியப்படும். காலமுறைப்படி
நோக்கின், இசைவல்லார் கையாளும் கருவிகளுள் பிந்தினது சிறந்திருக்குமேயன்றி
முந்தினது சிறந்திருக்காது. நால்வகை யாழுள் இறுதியது செங்கோட்டி யாழாதலின், அது
ஏனையவற்றினும் சிறந்ததாயிருத்தல் வேண்டும்.
ஆகவே, யாழ் என்பது
தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கணும் முக்காலும் வழங்கும் நரப்புக்
கருவிகட்கெல்லாம் பொதுப்பெயர் என்றும், அச் சொல்லைச் சிறப்புப் பெயராகக்
கொண்ட ஒரு தனிக் கருவியும் கடைச்சங்க காலத்திருந்ததில்லை யென்றும், அன்றிருந்த
பலவகை யாழுள் தலைசிறந்த செங்கோட்டியாழே இன்று வீணை என்னும் வடசொற் பெயர் கொண்டு
வழங்கிவருகிறதென்றும். யாழ் வேறு வீணை வேறு என்பது இரு வகையில் தவறான
திரிபுக்கொள்கை என்றும் அறிந்துகொள்க. யாழ் என்னும் தென்சொல் பிற்காலத்து
வழக்கற்றதினாலேயே முற்காலத்தில் சுரையாழ் என வழங்கியது. இன்று சுரைவீணை அல்லது வீணை
என உலக வழக்கில் வழங்குகின்றது.
6. ''யாழில் விரலுறுகோடு (Finger-board)
இல்லை. அதன் குடத்தி னின்றெழுந்த நரம்புகள் நேரே அதன்
வளைவுக்கோட்டில் கட்டப்பட்டன.'' இதற்கு மறுப்பு, ஏனை மறுப்புகளிலும், திரு.
வரகுண பாண்டியனார் இலக்கியச் சான்றும் மேற்கோளும் காட்டி விளக்கியுள்ள
செங்கோட்டி யாழின் 18 உறுப்புகளின் வரணனையுள்ளும், படங்களுள்ளும் கண்டு கொள்க.
''கோடே பத்த ராணி
நரம்பே மாடக மெனவரும் வகையின
வாகும்''
''மாட்டிய பத்தரின் வகையு
மாடகமுந் தந்திரி யமைதியுஞ் சாற்றிய
பிறவு முந்திய நூலின் முடிந்த வகையே''
என்னும் பழஞ்
சூத்திரங்களையும், |