அதிர்வு நரம்புகளால் இசையைப்
பெருக்கலாம் என்ற எண்ணம் உண்டானபின், பெருங்கலம் என்னும் பேரியாழில் முதன்முதலாக
அதிர்வு நரம்புகள் சேர்க்கப்பட்டிருத்தல்வேண்டும். ஆகவே, அவ் யாழில் பெரும் பத்தர்
முந்தினதும் அதிர்வு நரம்பு பிந்தியதுமாகும். தலைச்சங்க காலத்து மக்கள் தம் உடற்
பருமனுக்கேற்றபடி, இயல்பாகவே பெரும் பத்தர் அமைத்திருத்தல் வேண்டும். பிற்காலத்துச்
சிற்றுருவ மக்களின் சீறியாழ்க ளோடு ஒப்புநோக்கிய பின்னரே, அதற்குப் பெருங்கலம்
அல்லது பேரியாழ் என்று பெருமைச்சொல் அடைகொடுத்துப் பின்னோர் பெயரிட்டதாகத்
தெரிகின்றது. முதற்காலத்தில் அது அளவான கருவியாகவே கருதப்பட்டிருக்கலாம்.
பழங்காலத்திற் பெருவழக்காக வழங்கியதாக நூல்களிற் கூறப்படும் மத்தளம், அதன் பருமை
காரணமாக இன்று பயன்படுத்தப்படாமல் சில சிற்றூர்களிற் பதுங்கிக் கிடக்கின்றது. அதன்
சிறுவடிவான மதங்கம் (மிருதங்கம்) இன்று பெருவழக்காயுள்ளது. இங்ஙனமே, பேரியாழ்
சீறியாழ் நிலைமைகளும் கடைச்சங்க காலத்தில் இருந்திருத்தல் வேண்டும்.
பேரியாழினும் பேரியாழான
ஆதியாழ் (பெருங்கலம்) வேறு; நாரதப்பேரியாழ் என்பதும் வேறு.
''பெருங்கலமாவது பேரியாழ்; அது
கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்
கேற்ற ஆணிகளும் திவவும் உந்தியும் பெற்று, ஆயிரங்கோல் கொடுத் தியல்வது;
என்னை?
''ஆயிர நரம்பிற்
றாதியா ழாகும் ஏனையுறுப்பு மொப்பன
கொளலே பத்தரளவுங் கோட்டின தளவும்
ஒத்த வென்ப இருமூன் றிரட்டி வணர்சாணொழித்தென வைத்தனர்
புலவர்''
என்பது அடியார்க்குநல்லார் உரைப்பாயிரம். நாரதப்
பேரியாழ் வில்யாழ் வகையாகும்.
இதுகாறும் கூறியவாற்றால்,
திருமான் வரகுணபாண்டியனார் அவர்களின் பாணர்கைவழி முடிபுகள் அனைத்தும் உண்மையே
என்றும், அதற்குத் திருமான் சாம்பமூர்த்தி அவர்கள் வரைந்த மறுப்பு சற்றும்
பொருந்தாதென்றும் அறிந்துகொள்க.
குறிப்பு: வீணை என்னும் பெயர்,
வடசொல் என இம் மறுப்புரையிற் கூறியுள்ளேன். அது 'விண்' என்னும் பகுதியடியாகப்
பிறந்த தென் சொல்லே யென்று மூதறிஞர் துடிசைகிழார் கூறியுள்ளனர். விண்ணென ஒலித்தது,
விண்ணென இசைத்தது, விண்ணென இரைந்தது, விண்ணெனத் தெறித்தது என இருவகை வழக்கினும்
வழங்குதலானும், 'விள்' என்னும்
|