பக்கம் எண் :

''பாணர் கைவழி''மதிப்புரை(மறுப்பு) 125

-125-

 8. ''பாணர் கைவழி''மதிப்புரை(மறுப்பு)

   

மேலும், நரம்பின் அதிர்வு யாழின மரக்குற்றத்தாலும் பிறக்கும். இதை, 'நரம்பினிசையாற் பிறந்த பொல்லாமை'யாவன:

    ''செம்பகை யார்ப்புக் கூட மதிர்வு....''

    ''அதிர்வெனப் படுவ திழுமெனலின்றிச்
    சிதறி யுரைக்குந ருச்சரிப்பிசையே''                      (சீவக. 718)
என்பன.

    இவை மரக் குற்றத்தாற பிறக்கும்:
    ''நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயங்கும்
    பாரிலே நிற்றல் இடிவீழ்தல் நோய்மரப் பாற்படல்கோள்
    நேரிலே செம்பகை யார்ப்பொடு கூடம் அதிர்வுநிற்றல்
    சேரினேர் பண்கள் நிறமயக் கம்படும் சிற்றிடையே''                (சீவக. 719)

என்னும் நச்சினார்க்கினியர் உரையான்  அறிக.

    யாழோன் கையிலிருந்த கோல், அவன் தன் யாழ்பபுலமையை அரங்கேற்றிய காலத்து அவனுக்கு அளிக்கப்பட்ட வரிசைச் சின்னமே யன்றி, மெலிவு நரம்பதிர்ச்சியைத் தடுக்கும் இசைக்கருவி யுறுப்பன்று. மாதவி தன் ஆடல்பாடலை அரங்கேற்றித்  தலைக்கோற் பட்டம் பெற்றாள். அப் பட்டம் ஒரு கோலுடன் கொடுக்கப்பெறுவது. அக் கோல் தலைக்கோல் எனப்படும். தலைக்கோல் இசைநாடகக்கலையில் தலைமை குறிக்கும் கோல். 'தலைக்கோல் தானம்', 'தலைக்கோலாசான்', 'தலைக்கோலரிவை' முதலிய வழக்குகளை நோக்குக.

    9. ''வீணை ஒருகாலும் தமிழ்நாட்டி லிருந்ததில்லையென்று நூலாசிரியர் கூறுகின்றார்.''
செங்கோட்டியாழினும் வேறாக வீணையென்றொரு சிறந்த கருவி ஒருகாலும் தமிழ்நாட்டிலிருந்ததில்லை என்பது ஆசிரியர் கருத்தேயன்றி, வீணையே ஒருகாலும் தமிழ்நாட்டிலிருந்ததில்லை என்பதன்று.

    10. ''21 நரம்புள்ள பேரியாழிலும் பண்மொழி நரம்புகள் ஏழேயாகவும் ஏனைய வெல்லாம் அதிர்வு நரம்புகளாகவு மிருந்திருப்பின், அதற்குப் பெரும் பத்தர் எதற்கு? இசைபெருக்க அதிர்வு நரம்புகளே போதுமே!''

    முற்கால மக்கள் உருவத்திற் பெரியவராயிருந்ததினால், அவர் கையாண்ட கருவிகளெல்லாம் பெரியனவாகவே யிருந்தன. மக்கள் உருவம் வரவரச் சிறுத்துவருவதினால், அவர்கள் கையாளும்  பலவகைக் கருவிகளும் சிறுத்துவருகின்றன. பேரியாழ் மிகப் பழையதாதலின், அது முதுபழங்கால மக்கட்கேற்றபடி மிகப் பெரியதாயிருந்திருக்கின்றது. அது நால்வகை யாழில் முதற் குறிக்கப்பெறுவதற்கு அதன் பழைமையே காரணம். கடைச்சங்க காலத்திலும் அது வழங்கினதாகக் கூறப்படினும், அது உருவத்திற் பெரியவர்க்கே உரியதாய் அருகின வழக்காகவே வழங்கினதாகத் தெரிகின்றது.