பக்கம் எண் :

132மறுப்புரை மாண்பு

-132-

9. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு

   

2. 'பத்தினி என்னும் சொல் ''பத்நீ'' என்னும் வடசொல்லின் திரிபன்றி, பத்தன் (பக்தன்) என்பதன் பெண்பால் வடிவமன்று.'

வடமொழியில் கணவனைக் குறிக்கும் பதி என்னும் சொல்லின் பெண்பால் வடிவமான பத்நீ என்பது, மனைவி என்று  மட்டும் பொருள் படுவதேயன்றித் தமிழிற்போல் கற்புடைய மனைவியையே குறிப்பதன்று. பத்தினி அல்லது பத்தினிப்பெண் என ஒரு பெண்ணைக் குறித்துத் தமிழர் சொல்லும்போதெல்லாம், கணவன்மாட்டுப் பத்தி யுடையவள் என்றே கருதிச் சொல்கின்றனர் என்பதைச் சாத்திரியார் அவர்கள் அறியாதிருப்பது வருந்தத்தக்கது. பத்தினி என்னும் சொல் மனைவி என்றே பொருள்படு மாயின், பத்தினிப்பெண் (மனைவிப்பெண்) என்னும் இருபெயரொட்டு வழக்கிற்கே இடமிராது. இத் தொடரில், பத்தினி என்பது சிறப்புப் பெயரும் பெண் என்பது  பொதுப் பெயருமாகும். தெய்வத்தினிடத்தும் தெய்வத் தன்மையுள்ள அரசன் ஆசிரியன் முதலியோரிடத்தும் காட்டும் அச்சத் தோடு கூடிய அன்பு பத்தி எனப்படும். பத்தியுடையவன் பத்தன். பத்தியுடையவள் பத்தினி.

'குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல்', 'கற்புடை மனைவிக்குக் கணவனே தெய்வம்'  என்னும் பண்டைக் கொள்கைபற்றி, சிறந்த மனைவி கணவனிடத்தே பத்திபூண் டொழுகினமையால், பத்தினி எனப்பட்டாள். ஆகவே, பத்தன் என்னும் ஆண்பாற் பெயர் தெய்வபத்தி யுடையவனையும், பத்தினி என்னும் பெண்பாற் பெயர் கணவன் பத்தியுடையவளையும் குறிப்பனவாகும்.

    'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
     பெய்யெனப் பெய்யும் மழை'                        (குறள். 55)

என்னும் குறளும், பத்தினி என்னும் பெயர்க் காரணத்தை ஓரளவு உணர்த்தும்.

இங்ஙனம், பத்தினி என்னும் சொல் பத்தியுடையாள் என்று பகுசொற் பொருள் கொண்டிருப்பவும், அதைப் பத்நீ  என்னும் வடசொல்லோ டிசைத்ததற்கு, பத்தி என்னும் சொல் பக்தி என்னும் வடசொல்லின் திரிபெனச் சாத்திரியார் அவர்கள் கொண்டமையே காரணமாகும்.

பத்தி என்னும் சொல், பற்று என்பதன் மறுவடிவான பத்து என்பத னின்று திரிந்த தூய தென்சொல்லாகும்.

றகரவிரட்டை தகரவிரட்டையாகத் திரிவது இயல்பு.

எ-கா :

 ஒற்று - ஒத்து; குற்று - குத்து.
தஞ்சை மாவட்டத்தில் பொற்கொல்லரைப் பத்தர் என்பது மரபு. ஒருகால், பொன்னை நெருப்பிற் பற்றவைப்பவர் என்பது அப் பெயர்ப் பொருளாயிருக்கலாம்.