''அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய
லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ
ரன்ன'' (2)
என அதன் வகையும் உண்மைக்கொப்பவும் உத்தியொடு
பொருந்தவும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பவும், நன்னூலார்,
''உயிர்மெய் யாய்தம் உயிரள பொற்றள பஃகிய
இஉ ஐஒள மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்'' (60)
என அதன் வகையைப் பெருக்கி,
''உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய
ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர
மாறா றைகான் மூன்றே ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத்
துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப" (61)
என அவ் வகைகளின் தொகையை விரித்து விழுமிய
பயனின்றி மாண வர்க்கு வீணாக வெறுப்பை விளைத்துள்ளார். அவற்றை இக் காலத்துப்
பொதுக்கல்வி மாணவர்க்கும் பாடமாக விதித்து அவரை வருத்துவது மேலும் வருந்தத்தக்க
செய்தியாகும். இன்னின்ன எழுத்துகள் இன்னின்ன இடத்தில் குறுகியொலிக்கும் என,
மாத்திரை குறிக்குமிடத்தும் புணரியலிலும் கூறினாற் போதுமானதாம். அஃதன்றி,
குறுகியொலிக்கு மிடமெல்லாம் வெவ்வேறெழுத்தெனக் கூறுவது பிள்ளைத் தன்மையேயன்றிப்
புலமைத் தன்மையாகாது.
(2) ஆய்தப்
பிறப்பு
தொல்காப்பியர்,
''சார்ந்துவரி னல்லது தமக்கியல்
பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் தத்தம் சார்பிற் பிறப்பொடு
சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும்'' (101)
என்று
சார்பெழுத்துகள் தத்தம் முதலெழுத்துகளைச் சார்ந்து பிறப்பதைக் கூறியிருப்பவும்
நன்னூலார்,
''ஆய்தக் கிடந்தலை அங்கா முயற்சி''
(87) எனப் புதுவது புணர்த்தலாக விதித்துள்ளார்.
|