பக்கம் எண் :

நன்னூல் நன்னூலா-மறுப்பறுப்பு 27

-27-

 

4. நன்னூல் நன்னூலா-மறுப்பறுப்பு

 

மேலும், சமணம் சம்பந்தர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் தலை தாழ்ந்து போயினும், ஓரளவு இன்றுவரை இடையறாது தொடர்ந்து வருவதால், ஒரு சமணர் வீட்டிலும் ஐந்ததிகார நன்னூலில்லாமையும், ஏனை மூவதிகாரங்களுள் ஒன்றேனும் ஓரிடத்துமின்மையும், அவை ஆசிரியரால் இயற்றப்பட்டில என்பதே யுணர்த்தற் பால.

மறுப்பு 6 : தமிழ்ப் புலவராம் குடிகள்........

    'முன்னோர் ஒழியப் பின்னோர் பலரிலும்
    நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ'

    எனப் புகழ்வராயினர்.

அறுப்பு : இது, குயக்கொண்டான்மாரும் சுவாமிநாத தேசிகன் மாரும் வையாபுரிகளும் ஆகிய கோடரிக்காம்புகளின் கூற்றேயெனக் கூறி விடுக்க.

மறுப்பு 7:'ஒன்றொழி முந்நூற்று எழுபான் என்ப' என்று விரிவைக் கண்ட வர்களையும் காட்டுகின்றார்.

அறுப்பு : ''என்ப'' என்பது அசைச் சொல்லாயும் வரும் என்பதை மறுப்பாசிரியர் அறியார் போலும். தொல்காப்பியம் - சொல்லதிகாரம் 293ஆம் நூற்பா வுரையைக் காண்க.
மேலும், ஒன்றொழி முந்நூற்றெழுபான் என விரிக்கும் முன்னை நூலொன்றும் இதுபோதில்லை.

மறுப்பு 8 : உயிரெழுத்தாயினுஞ் சரி, மெய்யெழுத்தாயினுஞ் சரி எல்லா எழுத்துகளையும் மனத்தால் நினைக்கும்போது மாத்திரம் வாய் திறவாமல் நினைக்கலாமே யொழிய, எதிராளிக்குத் தாம் கூறிக் காட்டுங் காலத்து வாய் திறந்தே கூற வேண்டுதலின் மெய்த்தன்மையையுடைய ஆய்தம் அங்காத்தலில் தோன்றாது எனக் கொள்ளுதல் எப்படிப் பொருந்தும்?

அறுப்பு : மெய்யெழுத்துகளையும் கூறிக் காட்டுங்காலத்து அங்காந்தே கூற வேண்டியிருத்தலின், ஆய்தத்துக்குமட்டும் ஏன் ''அங்கா'' முயற்சியை விதந்து கூற வேண்டும்?
மேலும் பவணந்தி முனிவரே,

    'அவற்றுள்
    முயற்சியுள் அஆ அங்காப் புடைய' (76)

    என முதலீருயிர்கட்கும்,

    'இஈ எஏ ஐஅங் காப்போ
    டண்பன் முதனா விளிம்புற வருமே' (77) 

    என ஏனைச் சில வுயிர்கட்குமாக, அங்கா முயற்சியை இதழகல் உயிர்கட்கு மட்டும் ஏன்  வரையறுத்தல் வேண்டும்?