தொடர்பைப் பெரிதும் மேற்கொண்டு, அவர் தம்
நடையுடை பாவனை களில் பெரிதும் ஈடுபட்டு இருந்ததோடன்றி, அவர் தம் வடமொழியையும்
தமிழில் கலந்து வழங்குதலை உயர்ந்த நாகரிகமாகக் கருதிவந்தது.
அறுப்பு
: நம் மறுப்பாசிரியர் தமிழ் நாகரிகத்தையும் தமிழ் வரலாற்றையும்
செவ்வையாய் அறியாமையை அவர் மறுப்பு அறிவிக்கின்றது. அதற்கு விடை விளக்கம் ஒரு
பெருநூலாய் விரியும். வடமொழியாளர் தென்னாட்டுக்கு வந்த பின்பு, தமிழ்ப் புலவருள்,
தமிழன்பரும் (காட்டிக் கொடுக்கும்) தமிழ்ப் பகைவரும், (கவலையற்ற) நொதுமலருமாக மூவேறு
சாரார் தோன்றினர். இடைக்காலத்தில் தமிழன்பர் கை முற்றும் தாழ்ந்து விட்டதினால்,
வடவர் வாழ்க்கை முறையும் வடமொழியும் போற்றப்படத் தொடங்கினவேயன்றி
வேறன்று.
இந்திய நாகரிகப் பண்பாட்டின் அடிப்படை தமிழரதே
யென்பதும், தமிழ் தெற்கில் மூழ்கிப் போன குமரிநாட்டில் தோன்றி வடக்கே சென்று
திரவிடமாய்த் திரிந்ததென்பதும், திரவிடமே ஆரியத்துக் கடிப்படை யென்பதும், தமிழ்
வடமொழியால் தளர்ந்ததேயன்றி வளர்ந்ததன்று என்பதும், கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத்
தமிழ்நூல்கள் ஒளிக்கப்பட்டும் ஒழிக்கப்பட்டும் வந்தன என்பதும், உலகம் அறியும்
காலம் அடுத்து வருகின்றது என்பதை நம் மறுப்பாசிரியர்க்கு உணர்த்த
விரும்புகின்றேன்.
மறுப்பு 5
: 'சீயகங்கன் அரும்பொருள் ஐந்தையும் தருகவெனக்
கேட்டதாகவும், பன்னருஞ் சிறப்பிற் பாடித் தந்ததாகவும் பாயிரஞ் செப்பு கின்றது.
ஆதலின், ஐந்தும் அமைந்ததாய் அந் நன்னூல் நிறைநூலே ஆம் என்க.'
அறுப்பு
: சீயகங்கன் ஐந்திலக்கணமும் இயற்றித் தருமாறு பவணந்தி முனிவரைக்
கேட்டிருக்கலாம். அவரும் இசைந்திருக்கலாம். ஆயின், அந் நோக்கம்
நிறைவேறியதென்பதைக் காட்டற்கு யாதொரு சான்றுமில்லை.
பாயிரம், நூலியற்றியதைக்
குறிக்குமிடத்து, "முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்" என்று மட்டும்
கூறுகின்றதே யன்றி, ஐந்திலக்கணமும் வகுத்தனன் என்று ஐயமறக்
கூறவேயில்லை.
பெயரியலில் (11)
'பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல்
போற்பல சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வன
செய்யுள்'
என்று செய்யுளிலக்கணம் கூறியிருப்பது, சொல்லின் பொதுவிலக்கணம் கூறிய
நூற்பாவில் உள்ள 'வழக்கொடு செய்யுளின' என்னும் பாகுபாட்டின் ஒரு பகுதியை விளக்க
எழுந்ததாயினும், தொல்காப்பியத்தில் அங்ஙனம் கூறப்படாமையை நோக்கும் போது,
நன்னூலில் செய்யுளதிகாரம் என ஒன்று என்றேனும் அமைந்திருந்ததாகத்
தெரிகின்றிலது. |