செயல்களையும் குறிப்பிடுவதன்றி,
எல்லார்க்கும் பொதுவானவற்றைக் குறிப்பது மரபன்று. மேலும், ஒரு வேந்தன் போருக்குச்
செல்லும் தன் படைஞர்க்கு அளிக்கும் விருந்து, வணிக முறையில் கைம்மாறு கருதிச் செய்யுங்
கடமையேயன்றி, வள்ளன்மை முறையில் வழங்கும் கொடை யாகாது. போர்க்களத்தில் தன்
வேந்தன்பொருட்டு உயிரைத் துறக்கத் துணியும் மறவனுக்கு ஓர் உருண்டை சோறு
கொடுத்தல்தானா பெரிது! இதனாலேயே 'பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை' பாடாண்
பாட்டுகளில் இடம் பெறுவதில்லை. உதியஞ் சேரலாதனது 'பெருஞ்சோற்று மிகுபதம்'
'பிண்ட மேய பெருஞ் சோற்று நிலை'யேயாயின் போர் நிகழ்த்திய எல்லா வேந்தரும்
'பெருஞ் சோற்றுக' என்னும் பெயரடை (மொழி) பெற்றிருக்க லாமே!
உதியஞ்சேரலாதனது பெருஞ்சோற்று
மிகுபதத்துக்குப் பல சிறப்பியல்களுண்டு. அவையாவன: 1. கைம்மாறின்மை 2.
படைப்பெருமை 3. நடுநிலை 4. வரையாமை 5. சேய்மை
இச் சிறப்புப் பற்றியே
உதியஞ்சேரலாதன் ஒப்புயர்வற்ற அடை மொழி பெற்றான். முடிநாகராயர் பாட்டில்
பெருஞ்சோறு என்று மட்டும் குறியாது 'பெருஞ்சோற்று மிகுபதம்' என மிகுத்துக் கூறியதும்,
'வரை யாது' என்னுங் குறிப்பும், ''பிண்டம்'' என்னுஞ் சொல்லின்மையும்,
கவனிக்கத்தக்கன.
ராயர் என்னும் பெயர் கடைச்சங்க காலத்தில்
வழங்கப் பெறவில்லை என்பது கட்டுரைகாரர் கருத்து. அது கடைச்சங்கத்திற்கும் முந்தி
வழங்கியதென்பதற்குத் தொல்காப்பியமே சான்றாம். தொல்காப்பியர் காலம் கி.மு.7ஆம்
நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகாது. ஓர் ஆள்வினைத் துறைத் தலைவன் அரசனாற் பெறுஞ்
சிறப்பு மாராயம் எனப்பட்டது.
'மாராயம் பெற்ற நெடுமொழி
யானும்' (பொருள். 63)
என்பது தொல்காப்பியம்.
மாராயமாவது மாராயன் என்று அரசனாற் பட்டம்
பெறுகை. "பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" என்று கல்வெட்டில் வருதல் காண்க.
அரசனாற் சிறப்பெய்திய வெற்றி மறவரின் பெற்றிமை கூறும் புறத்துறையை மாராய வஞ்சி
எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் (3 : 11).
அரசன்-அரைசன்-அரையன்-ராயன்.
மாவரையன்-மாராயன்.
நாகர் என்பார் பண்டைக் காலத்தில் நாகவணக்கம்
மிகுந்திருந்த கீழ்நாட்டார். அவர் முடிநாகர், ஒளிநாகர், நீலநாகர் எனப் பல வகையர்.
|