பக்கம் எண் :

166ஊரும் பேரும்

சிறந்த நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து புனிதராயனார்.5

     இங்ஙனம் சிறந்து விளங்கிய மரங்களும் சோலைகளும் இறைவனை
வழிபடுதற்குரிய கோயில்களாயின. திருக்குற்றாலத்தில் உள்ள குறும்பலா
மரத்தைத் திருஞான சம்பந்தர் நறுந்தமிழாற் பாடியுள்ளார்.6

     நறுமணம் கமழும் செடி கொடிகள் செழித்தோங்கி வளர்ந்த
சூழல்களிலும் பண்டைத் தமிழர் ஆண்டவன் அருள் விளங்கக் கண்டார்கள்.
தேவாரத்தில் கொகுடிக் கோயில் என்னும் பெயருடைய ஆலயமொன்று
பாடல் பெற்றுள்ளது.7 கொகுடி என்பது ஒருவகை முல்லைக் கொடி. எனவே,
நல்மணம் கமழும் முல்லையின் அடியில் அமைந்த திருக்கோயில் கொகுடிக்
கோயில் ஆயிற்று. இன்னும், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று
ஞாழற்கோயில் என்ற குறிக்கப்படுகின்றது.8 ஞாழல் என்பது கொன்றையின்
ஒரு வகை. கொன்றையங் கோயிலே ஞாழற்கோயில் என்று பெயர் பெற்றது.

 

காவும் காடும்


     நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய
பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில்
விளங்கக் காணலாம். அவற்றுள் சில காவும் காடும் தேவாரப் பாட்டிலே
காணப்படுகின்றன.
 

  திருவானைக்கா

     காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ்சோலையிற் காட்சியளித்த
  ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து
  வழிபட்டமையால்