தமிழகத்திற்குத் திருவேங்கடம் வடக்கெல்லையாகவும் குமரியாறு
தெற்கெல்லை யாகவும், கடல் ஏனைய இரு திசையிலும் எல்லையாகவும்
அமைந்தன.
“வேங்கடம் குமரித் தீம்புனல் பௌவமென்று
இந்நான் கெல்லை
தமிழது வழக்கே”1
என்னும் பழம் பாட்டால் தமிழ் நாட்டின் நான்கு எல்லைகளையும்
நன்குணரலாகும். இது தொல்காப்பியர் கண்ட தமிழகம்.
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு தமிழகத்தின்
தென் பாகத்தைக்
கடல் கவர்ந்துவிட்டது.
“பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள”2
என்று இளங்கோவடிகள் வருந்திக் கூறுமாற்றால் இவ்வுண்மை
விளங்குவதாகும். ஆகவே, சிலப்பதிகாரக் காலத்தில் குமரியாறு போய்,
குமரிக் கடல் தமிழ் நாட்டின் தென்னெல்லை யாயிற்று.
இவ்வாறு குறுகிய தமிழகத்தில் ஆட்சி புரிந்த மூவேந்தரும்
முத்தமிழை ஆதரித்து வளர்த்தனர். ஆயினும், கால கதியில் மலை நாடாகிய
சேர நாட்டில் வழங்கிய தமிழ் மொழி திரிந்து வேறாகி மலையாளம் என்னும்
பெயர் பெற்றது. அந் நிலையில் மலையாள நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும்
இடையே குட மலைத் தொடர் எல்லை குறிப்பதாயிற்று.
இன்று தமிழ்த் தாயின் திருவடியாக விளங்குவது திருநெல்வேலி.
அந்நாட்டை நீரூட்டி வளர்க்கும்
|