நாடும் நகரமும்
நாடு
நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக்
குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த
முறையில் தமிழர் வாழ்ந்த நாடு
தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய
பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று.
சேர நாடு,
சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில்
மிகத் தொன்மை வாய்ந்தனவாகும்.
நாளடைவில் முந் நாடுகளின்
உட்பிரிவுகளும் நாடு என்று அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு
முதலியன இதற்குச் சான்றாகும்.
சிறுபான்மையாகச் சில தனியூர்களும் நாடென்று பெயர் பெற்று
வழங்குதல் உண்டு. முன்னாளில்
முரப்பு நாடு என்பது பாண்டி
மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர்
பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது.1
அதற்கு எதிரே ஆற்றின்
மறு கரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்ல நாடு
என்னும் பெயருடையது. இங்ஙனம் நாடு என்னும் சொல் ஊரைக்
குறிக்கும்
முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம். மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள
ஓரூர் கொரநாடு என்று அழைக்கப்படுகிறது. கூறை நாடு என்பதே |